ரஷ்யா - உக்ரைன் போரானது மோசமான நிலையினை எட்டியுள்ள நிலையில், இனி என்னவாகுமோ என்ற அச்சத்தினை உலக நாடுகள் மத்தியில் எழுப்பியுள்ளது.
இதற்கிடையில் உக்ரைனுக்கு யாரும் உதவ கூடாது என ரஷ்யா எச்சரிக்கை விடுத்து வருகின்றது.
இதே உக்ரைனுக்கு ஆதரவாக அணி திரண்டுள்ள நாடுகள், இந்தியாவினையும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்தியாவுக்கு தள்ளுபடி விலை
அண்டை நாடுகளின் பல்வேறு தடைகளின் மத்தியில் ரஷ்யா தனது பொருளாதார வளர்ச்சியில் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக நட்பு அல்லாத நாடுகள் ரூபிளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதையடுத்து, அதன் எண்ணெய் வணிகத்திலும் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. எனினும் தளராது தனது வீழ்ச்சி கண்டு வரும் எண்ணெய் சாம்ராஜ்ஜியத்தினை மீட்க, இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் விற்பனை செய்வதாகவும் அறிவித்தது.
வணிக உறவை மேம்படுத்த திட்டம்
அதோடு ரஷ்யா - இந்தியா இடையேயான வணிக உறவினை மேம்படுத்த ரூபாய் - ரூபிள் பரிவர்த்தனையை மேம்படுத்தும் விதமாக, அதற்கான ஆலோசனையில் மத்திய வங்கிகள் ஈடுபட்டு வருவதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. மேலும் எண்ணெய் மட்டும் அல்லாது, பல்வேறு உணவு பொருட்கள் உள்பட பலவற்றிற்கும் இந்தியாவினை அணுகி வருவது குறிப்பிடத்தக்கது. இது அண்டை நாடுகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
இந்தியாவில் இறக்குமதி குறைவு தான்
இதற்கிடையில் வெளியுறவுத் துறை செயலாளரான வினய் மோகன் குவாத்ரா, ரஷ்யாவில் இருந்து மற்ற உலக நாடுகள் எண்ணெய் இறக்குமதி செய்வதை விட, இந்தியா இறக்குமதி செய்வது மிக குறைவு தான் என கூறியுள்ளார்.
இது மறைமுகமாகவும், நாசூக்காகவும் அண்டை நாடுகளுக்கு கொடுத்துள்ள பதிலாகவும் பார்க்கப்படுகின்றது. உண்மையில் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்து வருவது சீனா உள்ளிட்ட நாடுகள் என்பதை தரவுகள் மூலம் அறிய முடிகிறது.
ரஷ்யா உக்ரைன் பிரச்சனை
இது ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், உலக நாடுகள் சில ரஷ்யாவில் இருந்து இறக்குமதியினை தடை செய்துள்ள நிலையில், இந்தியா தொடர்ந்து வணிகத்தினை மேம்படுத்தி வரும் நிலையில் இக்கருத்து வந்துள்ளது.
ஜெர்மனி இந்தியாவில் முதலீடு
இதற்கிடையில் பசுமை நிலைத்தன்மை வளர்ச்சி குறித்தான ஒப்பந்தம் குறித்து பேசியவர், 2030 வரையில் இந்தியாவில் 10 பில்லியன் யூரோ வரையில் மேம்பாட்டு உதவிகளை வழங்க ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - ஜெர்மனியின் ஒப்பந்தம்
மேலும் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல் குறித்தான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. ஜெர்மனி ஆதரவுடன் இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் மையத்தினை இந்தியா நிறுவும் என தெரிவித்துள்ளார்.