டெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றாலே... லாபத்தில் குளிப்பவர்கள் என்று தான் நம் அறிவு சொல்லும். ஆனால் இங்கு ஒரு நிறுவனம் கடந்த 3 மாதங்களில் சுமார் 50,000 கோடி ரூபாய் நஷ்டம் சம்பாதித்து இருக்கிறார்கள்.
அதுவும் சிக்கலுக்கு பெயர் போன இந்தியாவின் டெலிகாம் துறையில் செயல்பட்டு வரும் நிறுவனம். வொடாபோன் ஐடியா நிறுவனம் தான் அந்த துரதிர்ஷ்டசாலி.
வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் 2019 வரையான காலாண்டில் மட்டும் 50,922 கோடி ரூபாய் நஷ்டம் ஈட்டி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
நஷ்டக் கணக்கு
கடந்த செப்டம்பர் 2018-ல் வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் நிகர நஷ்டம் 4,874 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது கடந்த ஆண்டை விட சுமார் 11 மடங்கு கூடுதல் நஷ்டத்தைச் சந்தித்து இருக்கிறது வொடாபோன் ஐடியா. இந்திய டெலிகாம் துறையில் செயல்பட்டு வரும் வொடாபோன் ஐடியாவின் இவ்வளவு பெரிய நஷ்டத்துக்கு என்ன காரணம்..? 1. வருவாய் குறைவு 2. உச்ச நீதிமன்ற தீர்ப்பு 3. ஜியோ
1. வருவாய்
வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் ஒட்டு மொத்த காலாண்டுக்கான வருவாயே சுமார் 10,850 கோடி ரூபாய் தானாம். இந்த 10,850 கோடி ரூபாய் மொத்த வருவாயை விட நிகர நஷ்டம் சுமார் 5 மடங்கு அதிகம். அதோடு இந்த வருவாயும் கடந்த செப்டம்பர் 2018 காலாண்டில் ஈட்டிய 11,270 கோடி ரூபாயை விட குறைவு என்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது. ஆக இதற்கு மேல் நிதி நிலை பற்றி விவாதிக்கத் தேவை இல்லை.
இந்திய வரலாற்றில்
இந்தியாவின் கார்ப்பரேட் கம்பெனிகள் வரலாற்றிலேயே கடந்த டிசம்பர் 2018-ல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 26,961 கோடி நிகர நஷ்டம் தான் வரலாற்று சாதனையாக இருந்தது. ஆனால் இப்போது டாடா மோட்டார்ஸை விட சுமார் இரண்டு மடங்கு அதிக நஷ்டத்தை (50,922 கோடி ரூபாய்), தற்போது வொடாபோன் ஐடியா இந்த செப்டம்பர் 2019-ல் அறிவித்து இருக்கிறது.
ஏர்டெல்
இந்தியாவிலேயே ஒரே காலாண்டில் அதிக நிகர நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனங்கள் பட்டியலில், மூன்றாவது இடத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் கூட, இந்த செப்டம்பர் 2019 காலாண்டுக்கு 23,045 கோடி ரூபாய் நஷ்டம் அறிவித்து இருக்கிறது என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
காரணம்
சில வாரங்களுக்கு முன்பு தான் மத்திய அரசின் டெலிகாம் துறையின் கணக்குப் படி, லைசென்ஸ் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினால் மட்டும் வொடாபோன் ஐடியா சுமார் 30,000 கோடி ரூபாய்செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆள் ஆனது. ஆகையினால் தான் இந்த காலாண்டில் வொடாபோன் ஐடியா, சுமார் 50,921 கோடி ரூபாய் நஷ்டம் காண வேண்டியதாகிவிட்டது.
2. உச்ச நீதிமன்ற தீர்ப்பு பிரச்சனை
மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு டெலிகாம் நிறுவனத்தின் வருவாய்க்கு தகுந்தாற் போல, லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரத்துக்கும் கட்டணங்களை நிர்ணயிப்பார்கள். அப்படி கணக்கிடும் போது, நிறுவனங்கள் ஒரு மாதிரியும், அரசு டெலிகாம் துறை வேறு ஒரு மாதிரியும் கணக்கு செய்துவிட்டார்கள். அது தான் இந்த பிரச்னையில் அடி நாதமே..!
வருவாய் கணக்கு
டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சரி செய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) அடிப்படையில் தான், மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு நிறுவனத்துக்குமான லைசென்ஸ் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை நிர்ணயிக்கிறார்கள். இப்போது இந்த சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யில் எதை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும், எந்த வருமானத்தை எல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் தான் சிக்கல்.
அரசு தரப்பு கணக்கு
மத்திய டெலிகாம் துறையோ, சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கீட்டில் டிவிடெண்டுகள், மொபைல் போன்களை விற்று வரும் வருமானம், ஸ்கிராப் பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மூலம் வரும் வருமானம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் லைசன்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை கணக்கிட வேண்டும். டெலிகாம் சேவையில் இருந்து வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது என வாதிட்டது.
நிறுவனங்கள்
ஏர்டெல், வோடபோன் ஐடியா,போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்களோ, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெலிகாம் சேவை வழியாக கிடைக்கும் வருவாயை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை கணக்கிட வேண்டும். மற்ற எந்த வருமானத்தையும் கூடுதலாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வாதாடியது. இந்த வழக்கு சுமாராக கடந்த 14 ஆண்டுகளாக நடந்தது.
உச்ச நீதிமன்ற கணக்கு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ஒரு பழைய டெலிகாம் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய டெலிகாம் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யின் படி பார்த்தால், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சேவை வழியாக வரும் வருமானம் போக, மற்ற சில வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய டெலிகாம் துறை கணக்கிட்டு கோரியது போல, டெலிகாம் சேவை வருவாய் + மற்ற வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கேட்கும் லைசென்ஸ் தொகை சரியே என தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
நஷ்டம்
இப்போது மத்திய டெலிகாம் துறையின் கணக்கீட்டு முறை சரி என உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதால், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கும் லைசென்ஸ் கட்டணம் + லைசென்ஸ் கட்டணங்களுக்கான வட்டி + அபராதம் + அபராதத்துக்கான வட்டி என அனைத்தையும் சேர்த்து செலுத்தச் சொல்லும் தொகை தான் 92,642 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய தொகையை செலுத்தச் சொன்னால் டெலிகாம் நிறுவனங்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படத் தானே செய்யும். அதைத் தான் இப்போது வொடாபோன் ஐடியா நிறுவனமும் கணக்கு காட்டி இருக்கிறது.
3. ஜியோ
கடந்த செப்டம்பர் 2016-ல் ரிலையன்ஸ் ஜியோ களம் இறங்கியதில் இருந்து, இந்திய டெலிகாம் சேவையின் அனைத்து பரிமானங்களையும் மாற்றத் தொடங்கிவிட்டது. காரணம் இலவச வாய்ஸ் கால், டேட்டாவுக்கு மட்டுமே கட்டணம் என, புது யுக்தியைக் கையாண்டது ஜியோ. விளைவு வொடாபோன் ஐடியா உட்பட பல நிறுவனங்களுக்கும் பலத்த நஷ்டம்.
ஜியோ வளர்ச்சி
ஜியோ தொடங்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில், ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சுமார் 30 கோடியைத் தாண்டிவிட்டது. இதே கால கட்டங்களில், வொடாபோன் ஐடியாவின் மொத்த வருவாய் 20,000 கோடி ரூபாய் வருவாயில் இருந்து 10,000 கோடி ரூபாய்க்கு சரிந்துவிட்டது என்கிறது எகனாமிக் டைம்ஸ். இப்படி வழக்கமாக வரும் வருவாய் சரிந்து, உச்ச நீதிமன்றமும் எதிராக தீர்ப்பளித்து, வாடிக்கையாளர்கள் குறைந்து வியாபாரமும் சரிந்தால் வொடாபோன் ஐடியா நஷ்டத்தைக் காட்டாமல் எதைக் காட்ட முடியும்..?