தமிழ் நாட்டை சேர்ந்த ஆல்பாஃபெட் (கூகுள்) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு, வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தினை சேர்ந்த சுந்தர் பிச்சை இன்று உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
இந்தியா என்னில் ஒரு பகுதி
அமெரிக்காவுக்கான இந்திய தூதரான தரன்ஜித் சிங்கிடமிருந்து இந்த விருதை பெற்ற நிலையில், இது குறித்து சுந்தர் பிச்சை இந்தியா என்னில் ஒரு பகுதி.. நான் எங்கு சென்றாலும் அதனை என்னுடன் எடுத்து செல்வேன் என்றும் இந்தியாவை பெருமிதப்படுத்தியுள்ளார்.
ஜனவரி மாதமே அறிவிப்பு
2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குறித்து கடந்த ஜனவரி மாதம் இந்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பில் 128 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 117 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
உத்வேகம் தரும் பயணம்
இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம பூஷன் சுந்தர் பிச்சைக்கு வழங்கிய நிலையில், தரன்ஜித் சிங் சுந்தர் பிச்சையின் உத்வேகம் தரும் பயணம், உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்திய திறமைகளின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு நன்றி
இது குறித்து சுந்தர் பிச்சை பத்ம பூஷன் விருது பெறுவதும், இன்று என்னுடன் எனது குடும்பத்தினர் இருப்பதும் ஒரு பெரிய கவுரவம். இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. என்னை வடிவமைத்த நாட்டினால் கெளரவிக்கப்படுவது, நம்பமுடியாத அர்த்தமுள்ளதாக மாற்றி இருக்கிறது. இதனை விருதாக கருதாமல், இதனை பாதுகாப்பான ஒன்றாக வைத்திருப்பேன் என கூறியுள்ளார்.
ஐஐடியில் படிப்பு
மேலும் தனது தாய் தந்தையருக்கு நன்றி கூறிய சுந்தர், அவர்கள் எனக்காக நிறைய தியாகம் செய்தனர் எனறும் பெருமைப்படுத்தியுள்ளார். .
மதுரையில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதன் பின்னர் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புக்காக சென்றார். அதுமட்டும் அல்ல புகழ் பெற்ற வார்ட்டன் பல்கலைக் கழகத்தின் வர்த்தக பள்ளியில் எம் பி ஏவும் படித்தார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் தான்
படிப்பில் படு சுட்டியாக இருந்த சுந்தர் பிச்சை, விளையாட்டிலும் ஆர்வம் மிக்கவர். பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். பள்ளி பருவத்திலேயே மிகுந்த நினைவாற்றலை கொண்ட சுந்தர் பிச்சை நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சுந்தர் பிச்சையின் இளமை காலத்தில் அவர் வீட்டில் சொந்தமாக டிவி கார் இருக்கவில்லை. எனினும் அந்த குடும்பம் முழுக்க கல்வியில் கவனம் செலுத்தி வந்தது.
கூகுளும் சுந்தர் பிச்சையும்
கூகுள் நிறுவனம் ஆகஸ்ட் 2015 ஆண்டு ஒரு புதிய சிஇஓ வின் நியமனத்தை அறிவித்தது. இது உலகை வியப்புற வைத்தது எனலாம். அது சுந்தர் பிச்சையின் நியமனம் தான். 2004 இல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவில் கூகுளின் தேடல் பகுதியில் வேலை பார்த்தார். பிறகு கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்து வந்தது.


Click it and Unblock the Notifications