இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் பணவீக்கம், விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி திடீரென நாணய கொள்கை கூட்டத்தைக் கூட்டி வட்டி உயர்த்தும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை வெளியிடும் கூட்டத்தில் சக்திகாந்த தாஸ் முக்கியமான சில விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம்
இந்தியா பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சர்வதேச சந்தையால் பாதிக்காமல் இருக்க தனித் தீவிலோ அல்லது தன்னிச்சையாக இயங்கக் கூடிய நாடு இல்லை. ஒவ்வொரு முக்கியமான விஷயத்திலும் சென்சிடிவாக இருப்பது ஒரு வகையில் நல்லது தான் எனக் கூறியுள்ளார்.
பணவீக்கம்
கொரோனா தொற்று பின்பு இந்தியாவில் பணவீக்கத்தின் பாதிப்பு இருந்தாலும், ரஷ்யா - உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை, வர்த்தகத் தடை மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து 3 மாதங்களாக 6 சதவீதத்திற்கு மேலாகவே இருந்தது.
ரெப்போ விகிதம்
இதன் வாயிலாக ஆகஸ்ட் 2018க்கு பின்பு முதல் முறையாக ரெப்போ விகிதத்தை ஆர்பிஐ அதிகரித்துள்ளது. மேலும் மார்ச் மாதத்தைப் போலவே ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
4.40% ஆக உயர்வு
இந்தியாவின் பணவீக்க பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இன்று ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி 4.40% ஆக உயர்த்தியுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான சிஆர்ஆர் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.50% அதிகரித்துள்ளது.
சிஆர்ஆர் விகிதம்
சிஆர்ஆர் விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதன் மூலம் 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அனைத்து வங்கிகளும் ஆர்பிஐ-யிடம் டெப்பாசிட் வைக்கும் தொகையின் அளவு அதிகரிக்கும். வட்டி விகித உயர்வால் பணப்புழக்கத்தில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது என ஆர்பிஐ கவர்னர் உறுதி அளித்துள்ளார்.