கடந்த மாதம் 22ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குததலில் சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது.
வர்த்தக பாதை
இதில், லஷ்கர்-இ-தொய்பா முகாம்கள் மற்றும் ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் 100 தீவிரவாதிகள் பலியாகினர். முன்னதாக கடந்த 2ம் தேதியன்று பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானிலிருந்து நேரடி மற்றும் மறைமுக இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்தது. இதனை தொடர்ந்து முக்கியமான வர்த்தக பாதையான அட்டாரி-வாகா பார்டரை மூடியது.

இதனால் பாகிஸ்தானிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வது நின்று போனது. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் மற்றும் இதர வளைகுடா நாடுகள் வாயிலாக பாகிஸ்தான் பொருட்கள் ரகசிய வழியில் இந்தியாவுக்குள் வந்தது. இதனை கண்டுபிடித்த இந்தியா, இதற்கும் முடிவு கட்டும் வேளையில் இறங்கியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து எந்த பொருளும் மறைமுகமாக நம் நாட்டிற்குள் வராமல் தடுப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆய்வு
சில டிரான்ஸ்ஷிப்மென்ட் மையங்களை தவிர, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் மற்றும் பிற வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதியை ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்பப்படுவதாக இந்தியா ஏற்கனவே கவலை தெரிவித்து இருந்தது.
பாகிஸ்தான் பொருட்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வருவது, இந்தியா-ஐக்கிய அரபு அமீரகத்தின் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்துவதாகும் இதனால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் லேபிள்கள் மற்றும் இந்த நாடுகளிலிருந்து வரும் பொருட்கள் தகவல்கள் குறித்து கடுமையான சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
புல்வாமா தாக்குதல்
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, 2019ம் ஆண்டில் பாகிஸ்தான் பொருட்களுக்கு இந்தியா 200 சதவீதம் வரி விதித்தது. இதனையடுத்து இரு தரப்பு வர்த்தகம் குறைய தொடங்கியது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் பாகிஸ்தானிலிருந்து 28 லட்சம் டாலர் மதிப்புக்கு இந்தியா பொருட்களை இறக்குமதி செய்து இருந்தது. தாவரங்கள், விதைகள் , பேரீச்சம்பழங்கள், அத்திப்பழங்கள் மற்றும் மால்ட் சாறுகளை இந்தியாா அதிகளவில் இறக்குமதி செய்து இருந்தது.


Click it and Unblock the Notifications