இந்தியா சீனா எல்லை பிரச்சனைக்குப் பின்பு, இரு நாடுகள் மத்தியிலும் பல்வேறு வர்த்தகத் தடைகளும், வர்த்தகப் பிரச்சனைகளும் இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் இந்திய - சீனா இடையேயான வர்த்தகம் 86.4 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் இந்த வருடமும் வழக்கம்போல் சீனா, இந்தியாவின் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. அமெரிக்கா 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையை மாற்றவும், இனியும் சீனாவை நம்பியிருக்கக் கூடாது என்பதற்காகப் புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது.
ஆட்டோமொபைல் சந்தை
இந்திய ஆட்டோமொபைல் சந்தை அடுத்த 10 வருடத்தில் குறைந்தபட்சம் 60 முதல் 70 சதவீதம் எலக்ட்ரிக் வாகனங்களாக மாறும் எனக் கணிப்பு நிலவும் நிலையில், லித்தியம் பயன்படுத்திப் பேட்டரி தயாரிப்பதை விடவும், அலுமினியம் பயன்படுத்திப் பேட்டரி தயாரிக்க முதலீடு செய்ய இந்தியா திட்டமிட்டு வருகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
இதற்காக நாட்டின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இஸ்ரேல் நாட்டு நிறுவனமான ஃபைனர்ஜி (Phienergy) லிமிடெட் உடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
இந்தியா - சீனா
இந்த மாற்றத்தின் மூலம் இந்தியா சீனாவிடம் இருந்து மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தை இந்தப் பேட்டரிக்காகத் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யத் தேவையில்லை. இதனால் பேட்டரி தயாரிப்பு மற்றும் வர்த்தகத்திற்குச் சீனாவை நம்பியிருக்கத் தேவையில்லை.
இந்தியாவில் அலுமினியம் அதிகம்
இந்தியாவில் லித்தியம் தயாரிக்கச் சில வழிகள் இருந்தாலும், லித்தியம் உருவாக்குவதற்கான தாது அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் இந்தியாவில் அலுமினியம் தயாரிக்கும் பாக்சைட் தாது மிகவும் அதிகமாக இருப்பதாக இந்தியன் ஆயில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் தலைவரான ராமகுமார் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஃபைனர்ஜி நிறுவனம்
இஸ்ரேல் நாட்டின் ஃபைனர்ஜி நிறுவனம் அலுமினியம் மற்றும் ஜிங்க் உலோகத்தை வைத்து மின்சாரத்தைச் சேமிக்கவும், பயன்படுத்தும் ஒரு பாதுகாப்பான முறையைக் கண்டுப்பிடித்து வெற்றி கண்டுள்ளது.
3 முக்கிய நன்மைகள்
இந்தியாவில் அதிகளவில் இருக்கும் அலுமினியத்தை வைத்து ஃபைனர்ஜி நிறுவனத்தின் அலுமினியம் - ஏர் பேட்டரியை தயாரிப்பது மூலம் 3 பயன்கள் உள்ளது.
1. மலிவான விலையில் தயாரிக்க முடியும்
2. நீண்ட தூர பயணத்திற்கான பேட்டரியை தயாரிக்க முடியும்
3. பாதுகாப்பான எனர்ஜி சேமிப்புத் தளத்தை உருவாக்க முடியும்
இந்தியாவின் EV கனவு
இந்தியாவின் EV கனவிற்கு இந்தியன் ஆயில் - ஃபைனர்ஜி நிறுவன கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2020 ஆரம்பத்திலேயே இந்தியன் ஆயில் ஃபைனர்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.