எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் வெறுமனே அசெம்பிளிங் செய்யும் நிலையில் இருந்து, அதன் அடிப்படை உதிரிபாகங்களை உருவாக்கும் முக்கிய முயற்சியில் இந்தியா களமிறங்கியுள்ளது. இதற்கான முதல் கட்டமாக, எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ், 7 புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த திட்டங்களுக்கான மொத்த முதலீடு தொகை ரூ.5,532 கோடி ஆகும். இதில், எதிர்பார்க்கப்படும் உற்பத்தி மதிப்பு ரூ.44,406 கோடியாக உள்ளது. இத்திட்டங்களின் மூலம் முதற்கட்டமாக 5,000-க்கும் மேற்பட்ட வேலைகள் உருவாக்கப்பட இருக்கிறது. மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய 7 திட்டங்களில், 5 திட்டங்கள் தமிழ்நாட்டில் அமையவுள்ளன.

ஒப்புதல் பெற்ற முக்கிய நிறுவனங்கள் : இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களில் Kaynes Circuits India Pvt Ltd (4 திட்டங்கள்), SRF Ltd, Syrma Strategic Electronics Pvt Ltd, மற்றும் Ascent Circuits Pvt Ltd ஆகியவை அடங்கும்.
இதுதொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "ஒப்புதல் அளிக்கப்பட்ட மல்டி-லேயர் பிசிபிகள், காப்பர் லேமினேட்டுகள், கேமரா மாட்யூல்கள் மற்றும் பாலிப்ரொப்பிலீன் ஃபிலிம் போன்ற உதிரிபாகங்கள் தான் ஒவ்வொரு எலக்ட்ரானிக்ஸ் சாதனத்தின் அஸ்திவாரமாக உள்ளது.
இந்தப் புதிய ஆலைகள் மூலம், உயர் அடர்த்தி கொண்ட பிசிபி தேவையில் 20%-யும், கேமரா மாட்யூல் தேவையில் 15%-யும், காப்பர் லேமினேட் தேவையில் 100%-யும் இந்தியா பூர்த்தி செய்யும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எலக்ட்ரிக் உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த இலக்குகளை விட, தொழில்துறையினர் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர். ரூ.59,350 கோடி முதலீட்டை இலக்காக கொண்ட அரசுக்கு, அதைவிட இரு மடங்குக்கும் மேலாக ரூ.1.15 லட்சம் கோடி முதலீட்டுக்கு உறுதிமொழி கிடைத்திருப்பது, இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிக்கும் துறை மீதுள்ள அதிகபட்ச நம்பிக்கையையும், ஆர்வத்தையும் காட்டுகிறது. இதற்காக 249 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டங்கள் மூலம் ரூ.10.34 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி மற்றும் 1.41 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் இந்தியாவின் வருடாந்திர இறக்குமதி செலவை ரூ.18,000 முதல் ரூ.20,000 கோடி வரை இந்தத் திட்டங்கள் குறைக்கும் என்று அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், உள்நாட்டு மதிப்பு கூட்டல் 38 முதல் 40% வரை உயர்ந்து, சீனாவிற்கு இணையான நிலையை அடைய வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு முதற்கட்ட ஒப்புதலில் ஆதிக்கம் செலுத்தினாலும், 2027ஆம் ஆண்டு வரை அமலில் உள்ள இந்தத் திட்டத்தின் அடுத்தடுத்த கட்டங்கள், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தொடரும். வரும் சுற்றுக்களில், மூலதன உபகரணங்கள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், அதற்கான விண்ணப்பங்கள் இன்னும் திறந்திருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம், இந்தியா வெறும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அசெம்பிளிங் மையமாக இல்லாமல், உலகளாவிய அளவில் உதிரிபாகங்களை வழங்கும் முக்கிய நாடாக உருவெடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications