2020ஆம் ஆண்டில் உலகில் சுமார் 21 நாடுகளில் ஏற்பட்ட இண்டர்நெட் சேவை முடக்கத்தின் வாயிலாக ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளில், இந்தியா சுமார் 2.8 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது எனப் பிரிட்டன் நாட்டின் இண்டர்நெட் பாதுகாப்பு ஆராய்ச்சி துறை அமைப்பான டாப்10விபிஎன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
21 நாடுகள் அடங்கிய பட்டியலில் 20 நாடுகளில் ஏற்பட்ட மொத்த பொருளாதாரப் பாதிப்பை விடவும் இந்தியா அதிகப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இண்டர்நெட் சேவை முடக்கம்
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 8,927 மணி நேரம் இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டு உள்ளது என டாப்10விபிஎன் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் 2020ல் மட்டும் இந்தியாவில் 2.8 பில்லியன்
டாலர் அளவிலான பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டு நஷ்டம் அடைந்துள்ளது. இது 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட நஷ்ட அளவை விடவும் இரண்டு மடங்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
75 மடங்கு அதிகம்
உலகில் எந்த ஒரு நாடுகளிலும் இல்லாத வகையில் இந்தியாவில் பல பகுதிகளில் இண்டர்நெட் முடக்கப்பட்டு உள்ளது. 2020ல் இப்பட்டியலில் இருக்கும் 20 நாடுகளை விடவும் சுமார் 75 மடங்கு அதிக மணிநேரம் இண்டர்நெட் சேவை
இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிராமங்கள், மாவட்டங்கள்
இந்தியாவில் 2020ஆம் ஆண்டுக் கொரோனா தாக்கம் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் அதிகளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையிலும், நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாகக் கிராமங்கள், நகரங்கள் மற்றும் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிகளவில் இண்டர்நெட் கட்டுப்பாடும் முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஆய்வறிக்கையில் பெரும் பகுதியில் ஏற்பட்ட இண்டர்நெட் முடக்கம் மட்டுமே கருத்தில் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
கஷ்மீரில் இண்டர்நெட் கட்டுப்பாடு
டாப்10விபிஎன் ஆய்வறிக்கையில், தனிப்பட்ட முறையில் ஆகஸ்ட் 2019 முதல் மார்ச் 2020 வரையில் கஷ்மீரில் இண்டர்நெட் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இன்றளவும் பல பகுதிகளில் 2ஜி சேவை மட்டுமே இயங்குகிறது. இதை டாப்10விபிஎன் அமைப்பு 'the longest Internet shutdown in a democracy' என அழைக்கிறது.
11.70 மில்லியன் டெலிகாம் வாடிக்கையாளர்கள்
இந்தக் கட்டுப்பாட்டின் காரணமாக ஜம்மு கஷ்மீர் பகுதியில் இருக்கும் 11.70 மில்லியன் டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு மத்தியிலான தகவல் பரிமாற்றம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல், மருந்து விநியோகம், வர்த்தகம், நிதியியல் பணப் பரிமாற்றம், பள்ளி மற்றும் கல்வி துறை, இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை கடுமையாகப் பாதித்துள்ளது என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
93 முறை இண்டர்நெட் ஷட்டவுன்
2020ல் சுமார் 93 முறை உலக நாடுகளில் பெருமளவிலான இண்டர்நெட் ஷட்டவுன் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவைத் தவிரப் பெலாரஸ், மியான்மர், ஏமன், எத்தியோப்பியா, அஜர்பைஜான், துருக்கி, சிரியா, ஈரான், தான்சானியா, வெனிசுலா மற்றும் சோமாலியா ஆகிய பகுதிகளில் இண்ட்நெட் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இண்டர்நெட் முடக்கத்திற்குப் பெயர்போன சீனா, வட கொரியா ஆகிய நாடுகள் குறித்துத் தகவல்கள் டாப்10விபிஎன் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.