கொரோனா லாக் டவுன் இருப்பதால் வாகனங்களை நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மக்களை பாதிக்கும் ஒரு அடிப்படை செண்டிமெண்ட் விஷயமாகத் தான் இருக்கிறது.
இந்த நேரத்தில் மக்கள் பயணிக்கவில்லை என்றாலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் எல்லாமே, போக்குவரத்து வசதிகள் மூலமாகத் தானே கொண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே பெட்ரோல் டீசல் மீதான விலை ஏற்றம், தங்கள் தற்போதைக்கு நேரடியாக பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக பாதிக்கும் எனப் புரிந்து வைத்திருக்கிறார்கள் மக்கள்.
வரி உயர்வு
நேற்று மாலை, மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரியை 10 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசல் மீதான கலால் வரியை 13 ரூபாயாகவும் அதிகரித்தது. இதற்கு நேர் மாறாக கச்சா எண்ணெய் விலை கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
1.6 லட்சம் கோடி
இப்படி மத்திய அரசு, பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை கடந்த இரண்டு மாத காலத்தில், இரண்டாவது முறையாக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் டீசல் மீதான, இந்த வரலாறு காணாத ஏப்ரல் 2020 வரி உயர்வினால் மட்டும், மத்திய அரசுக்கு, இந்த 2020 - 21 நிதி ஆண்டில் சுமாராக 1.6 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலாக வாய்ப்பு இருக்கிறதாம்.
கலால் வரி ஏற்றம்
கடந்த நவம்பர் 2014 முதல் ஜனவரி 2016 வரை பாஜக அரசு கொஞ்சம் கொஞ்சமாக, பெட்ரொல் மற்றும் டீசல் மீது 9 முறை வரியை அதிகரித்தார்கள். அந்த 9 முறையில் பெட்ரோல் மீதான கலால் வரியை 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 13.47 ரூபாயும் அதிகரித்தார்கள்.
2.42 லட்சம் கோடி
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு, ஒட்டு மொத்த கலால் வரி வசூலில் செமயாக பிரதிபலித்தது. 2016 - 17 நிதி ஆண்டில் கலால் வரி 2.42 லட்சம் கோடி வசூலானது. 2014 - 15-ல் கலால் வரியாக மத்திய அரசு வெறும் 99,000 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டியதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
குட்டி கட்
கடந்த அக்டோபர் 2017-ல் பெட்ரோல் டீசல் மீதான வரியை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைத்தது. அதற்கு அடுத்த ஆண்டு மேலும் 1.50 ரூபாயைக் குறைத்தது மத்திய அரசு. ஆனால் ஜூலை 2019 மீண்டும் பெட்ரோல் டீசல் மீதான வரியை லிட்டருக்கு தலா 2 ரூபாய் அதிகரித்தது.
பெரிய வரவு தான்
மார்ச் 14, 2020-ல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தியது. ஆக வரியைக் குறைத்ததை விட கூடுதலாகவே மார்ச்சில் கலால் வரியை விதித்துவிட்டது. இது போக இப்போது ஏப்ரல் 2020-ல் பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 13 ரூபாயும் கூடுதலாக வரி விதித்து இருப்பது, தொக்காக மத்திய அரசுக்கு வருவாய் தான்.
மொத்தம் கலால் வரி வசூல் வாய்ப்பு
2016 - 17 நிதி ஆண்டிலேயே பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வினால், மொத்த கலால் வரி வசூல் 2.42 லட்சம் கோடி ஈட்டி இருக்கிறார்கள். இப்போது ஏப்ரல் 2020-ல் புதிதாக விதித்து இருக்கும் கூடுதல் கலால் வரி வழியாக மட்டும் 1.6 லட்சம் கோடி ரூபாய் ஈட்ட இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆக 2020 - 21 நிதி ஆண்டில் இந்திய அரசு கலால் வரி வழியாக மட்டும் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை ஈட்ட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.