ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகள் பலவும் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருக்கும் கச்சா எண்ணெய்-யிலேயே கைவைத்தன.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் ரஷ்யாவின் அடிமடியிலேயே கைவைத்தன.
இதனால் ரஷ்யா பொருளாதார ரீதியாக முடங்கிக் போகும். அதன் பிறகு ரஷ்யாவை எளிதாக சமாளிக்க முடியும். ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு அடங்கி போகும் என மேற்கத்திய நாடுகள் பகல் கனவு கண்டன.
ரஷ்யாவின் புதிய அவதாரம்
ஆனால் பகல் கனவு பலிக்காது என்பதை போல ரஷ்யா வேறு விதத்தில் தனது அவதாரத்தை எடுத்தது. அது தள்ளுபடி விற்பனையில் எண்ணெய் விற்பனை என்பது தான். தடை செய்த நாடுகளும், செய்வதாக அறிவித்த நாடுகளுக்கும் கூட, நல்ல வாய்ப்பினை மிஸ் செய்து விட்டோமோ என்ற எண்ணத்தை உருவாக்கியது.
உச்ச வரம்பு
ஆனால் ரஷ்யாவினை எப்படியேனும் முடக்கி விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் மேற்கத்திய நாடுகள் மத்தியில், கடந்த வாரம் ஜி7 மற்றும் சில நாடுகள் கச்சா எண்ணெய் விலைக்கு 60 டாலர் உச்ச வரம்பை நிர்ணயம் செய்தன. அப்படி இந்த உச்ச வரம்பை மீறி ரஷ்யா விற்பனை செய்தால் இன்சூரன்ஸ் மற்றும் கப்பல்களுக்கு தடை விதித்துள்ளன.
இந்தியாவுக்கு ஆதரவு
ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் ஒரு போதும் தளர மாட்டோம் எனும் விதமாக, கட்டுப்பாடுகளை சமாளிக்க மிகப்பெரிய டேங்கர் கப்பல்களை தயாரிக்கவும், இந்தியாவுக்கு பெரிய கப்பல்களை குத்தகைக்கு விடவும், கட்டுமானங்களில் ஒத்துழைப்பு தரவும் ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அறிவித்தது.
60 டாலர்களுக்கு கீழ் விற்பனையா?
இந்த நிலையில் தற்போது தடைகளை மீறி எண்ணெய் வாங்க இந்தியா தயாராக இருப்பதாக அறிவித்த நிலையில், தற்போது மேற்கத்திய நாடுகளின் தடையை மீறி 60 டாலர்களுக்கும் கீழாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவுக்கு விலை எவ்வளவு?
ஏற்கனவே எந்த தடை இருந்தாலும் இந்திய மக்களின் நலனுக்காக, தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்கும் என அறிவித்தது. ஏற்கனவே விலை உச்ச வரம்பு விலைக்கு கீழாக ரஷ்யா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகின்றது. இது சுமார் பேரலுக்கு 49 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், ESPO கலவை மற்றும் சோகோல் முறையே 62 டாலர் மற்றும் 69 டாலர் என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
மிக நல்ல விஷயம்
எது எப்படியோ, ஏற்கனவே பற்பல தடைகளுக்கும், அழுத்தத்திற்கும் மத்தியில் இந்தியா எண்ணெய் வாங்கி வருகின்றது. தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி 60 டாலர்களுக்கு கீழான விலையில் எண்ணெயை, இந்தியாவுக்கு வழங்கினால், அது மேற்கோண்டு இந்தியா மீதும், ரஷ்யா மீதும் கோபத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். எனினும் இந்திய மக்களின் நலன் தான் முக்கியம் என இந்தியா முடிவெடுத்திருப்பது, மிக நல்ல விஷயம் தான்.