ஈரான் போர் இந்தியாவில் பெரிய அளவிலான எல்பிஜி பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது. இந்த பிரச்சனை இன்னும் முழுமையாக தீர்ந்துவிடவில்லை. தற்போதைக்கு வீட்டு உபயோக பயன்பாட்டிற்கு முழுமையாக சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் வினியோகம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரான் போர் முடிவுக்கு வந்தாலும் எல்பிஜி விநியோகம் சீராவதற்கு மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் வரை தேவைப்படும் என்கின்றனர் அரசு அதிகாரிகள். இந்தியாவைப் பொறுத்தவரை தனக்கு தேவையான பெருபான்மையான எல்பிஜியை வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. எல்பிஜி கேஸ் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டாலும் மொத்த நாட்டின் தேவையும் அதனால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் தான் ஈரான் போர் இந்தியாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை உயர்வு, வாடகை ஆட்டோ மற்றும் வாடகை கார்களின் விலை உயர்வுக்கு இந்த எல்பிஜி தட்டுப்பாடு தான் முக்கிய காரணம். இந்த நிலையில் தான் மத்திய அரசு எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கு மாற்றாக வணிக ரீதியிலான சமையல் தேவைகளுக்கு எத்தனாலை பயன்படுத்துவது குறித்து முக்கியமான ஆலோசனையை நடத்தி வருகிறது. தற்போது இந்தியா தனது எல்பிஜிக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதால் தான் வெளிநாட்டில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் உள்நாட்டில் வலுவாக எதிரொலிக்கின்றன.
எத்தனாலை நாம் எரிபொருளாக பயன்படுத்தும் போது இந்தியாவிற்கு இறக்குமதி சுமை இருக்காது. வெளிநாடுகளில் எந்த பிரச்சனை இருந்தாலும் உள்நாட்டில் மக்களுக்கு தேவையான எரிபொருள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும் இது பல்வேறு பொருட்களின் விலைவாசி உயராமல் தடுக்கும். சர்க்கரை ஆலைகள் மற்றும் எத்தனால் தயாரிப்பு நிறுவனங்கள் வணிக ரீதியிலான சமையல் அதாவது உணவகங்கள் டீக்கடைகள் உள்ளிட்டவற்றுக்கு எத்தனாலை ஒரு சிறந்த மாற்று பொருளாக பயன்படுத்தலாம் என்று யோசனையை முன் வைத்திருக்கின்றனர்.

இதற்காக பிரத்தியேகமான எத்தனால் ஸ்டவ் மற்றும் விநியோக முறையை உருவாக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்திருக்கின்றன. எத்தனால் சுத்தமாக எரியக்கூடியது என்பதால் கார்பன் வெளியேற்றம் குறைவு. எல்பிஜியுடன் ஒப்பிடும்போது இதன் விலை மலிவாக இருக்கும் என சொல்லப்படுகிறது. உள்நாட்டிலேயே போதிய அளவு எத்தனால் தயாரிக்கப்படுவதால் வெளிநாடுகளை எரிபொருளுக்கு சார்ந்து இருக்கும் போக்கை குறைக்கும் உள்நாட்டில் விவசாயிகளுக்கும் இது சார்ந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும் வருமானத்தை ஈட்டி தரும்.
முதல் கட்டமாக உணவகங்கள் மற்றும் வணிக இடங்களுக்கு கொண்டு வரப்படக்கூடிய இத்தகைய எத்தனால் பயன்பாடு வெற்றி கிடைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் வீடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது. இது தற்போதைக்கு திட்டமிடல் மற்றும் ஆலோசனை கட்டத்தில் தான் உள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் தற்போது எப்படி பெட்ரோலில் எத்தனால் கலப்பது ஒரு பெரிய விஷயமாக மாறி இருக்கிறதோ அதேபோல சமையல் துறையிலும் எத்தனால் பயன்பாடு மிகப் பெரிய ஒரு மாற்றத்தை கொண்டு வரும்.
இந்த பரிந்துரை குறித்து மத்திய பெட்ரோலியம் , சாலை போக்குவரத்து மற்றும் தொழில் உற்பத்தி துறை , உணவு துறை சார்ந்த அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விரைவில் இதனை கொள்கையாக கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications

