இந்திய விமான போக்குவரத்து துறையில் விரைவில் ஒரு அதிரடி மாற்றம் வர இருக்கிறது. இதன்படி புது புது நிறுவனங்கள் விமான சேவைகளை வழங்க உள்ளன. குறிப்பாக அதானி குழுமம் ஏர்லைன்ஸ் பிஸ்னஸில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது விமான நிலையங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் விமான நிறுவனங்களை சொந்தமாக வைத்திருக்க அல்லது இயக்க அனுமதி இல்லை. மேலும் விமான சேவை நிறுவனங்களில் அவை பங்கும் வைத்திருக்க முடியாது. கௌதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் விமான நிலைய மேலாண்மையில் ஈடுபட்டாலும் விமான சேவைகளை வழங்க முடியாது.

இந்த விதியை தளர்த்தி, அதானி குழுமம் மற்றும் ஜிஎம்ஆர் போன்ற விமான நிலைய செயல்பாட்டு நிறுவனங்கள் சொந்தமாக விமானங்களை இயக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள விமான நிறுவனங்களில் அதிக பங்குகளை வாங்கவோ அனுமதிக்கும் வகையில் கொள்கை மாற்றங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களே சுமார் 90 சதவீத சந்தையை கொண்டுள்ளன. இதனால் இந்த நிறுவனங்களின் விமான சேவையில் சிறிய சிக்கல் ஏற்பட்டாலும் நாடு முழுவதுமே விமான சேவைகளை இது பாதிக்கிறது. கடந்த ஆண்டு இண்டிகோ விமான சேவை பிரச்சினையால் நாடே ஸ்தம்பித்து போனது. இத்தகைய சூழலில், புதிய நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் போட்டியை அதிகரித்து, பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாம்.
2019-ல் தொடங்கப்பட்ட அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ், அகமதாபாத், லக்னோ, மும்பை, ஜெய்ப்பூர், கௌஹாத்தி, மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் நவி மும்பை ஆகிய விமான நிலையங்களை நிர்வகித்து வருகிறது. இந்தியாவின் பயணிகள் போக்குவரத்தில் 25 சதவீதமும், சரக்கு போக்குவரத்தில் 33 சதவீதமும் இந்த நிறுவனத்தின் வசம் உள்ளது.அடுத்ததாக டெல்லி, ஹைதராபாத், கோவா, நாக்பூர் விமான நிலையங்களை நிர்வகிக்கும் ஜிஎம்ஆர் நிறுவனம், போகபுரத்தில் புதிய விமான நிலையத்தையும் உருவாக்கி வருகிறது.
விமான நிலையங்களை நடத்தும் நிறுவனங்களே விமான சேவையையும் வழங்கினால், அவர்களுக்கு சாதகமாக விமான நிலையங்களில் முன்னுரிமை அளிக்கப்படுமோ என்பதால் இந்த நிறுவனங்களுக்கு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது இவர்களுக்கும் அனுமதி கொடுக்கும் வகையில் அரசு கொள்கை மாற்றம் கொண்டு வர உல்ளது.
இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. 2040-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் விமான பயணிகள் போக்குவரத்து ஆறு மடங்கு அதிகரித்து 1.1 பில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிக ரீதியான விமானங்களின் எண்ணிக்கை 2,359 ஆக உயரும் என்றும், இத்துறை சுமார் 25 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சிக்குத் துணைபுரியும் வகையிலேயே இத்தகைய கொள்கை மாற்றங்கள் ஆலோசிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
அரசு இந்த கொள்கை முடிவை எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், இந்தியாவில் அதானி குழுமத்தால் விமானசேவைகளையும் வழங்க முடியும். எனவே அதானி ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்படலாம் அல்லது வீழ்ச்சியில் இருக்கும் நிறுவனத்தை வாங்கி அதானி குழுமம் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.


Click it and Unblock the Notifications

