கொரோனா பாதிப்பு மூலம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற இந்தியா அதிகளவிலான பணத்தை அச்சிட வேண்டும் எனக் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோட்டாக் தெரிவித்துள்ளார்.
புதிதாக அச்சடிக்கும் பணத்தை இரு பிரிவுகளில் முக்கியமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். ஒன்று வசதி வாய்ப்புகள் குறைவாக இருக்கும் ஏழை மக்களுக்கும், கொரோனா மூலம் அதிகளவில் பாதிப்பு அடைந்த துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கச் செலவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அரசு, ரிசர்வ் வங்கி முடிவு
மேலும் அரசின் நிதிநிலை அறிக்கை விரிவுபடுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. இதை அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு நாணய கொள்கையிலோ அல்லது பணத்தை அச்சடிப்பது குறித்தோ வரைவில் முடிவு செய்யப்பட வேண்டும். இப்போது இதைச் செய்யவில்லை என்றால் எப்போது செய்யப்போகிறோம் என உதய் கோட்டாக் தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மக்களுக்கு
இதேபோல் நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக நிதி வழங்குவதில் அரசு நாட்டின் மொத்த ஜிடிபி-யில் 1 சதவீதம் அல்லது 1 முதல் 2 லட்சம் ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்ய வேண்டும். இதன் மூலம் நாட்டின் நுகர்வு அளவு மேம்படுவது மட்டும் அல்லாமல் ஏழை மக்களின் வாழ்வு மேம்படும் எனவும் உதய் கோட்டாக் தெரிவித்துள்ளார்.
ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவைகள்
மேலும் ஏழை மக்களுக்கு அனைத்து விதமான மருத்துவச் சிகிச்சையும், மருத்துவச் சலுகையும் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார் உதய் கோட்டாக். இந்தக் கொரோனா காலத்தில் பல கோடி ஏழை மக்கள் முழுமையான மருத்துவச் சிகிச்சை பெற முடியாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு பிரிவில் பாதிப்பு
தற்போது இந்தியாவில் வர்த்தகங்கள் இரு பிரிவில் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒன்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வர்த்தகங்கள் மற்றும் கொரோனா பாதிப்பைத் தாங்கும் நிறுவனங்கள்.
மற்றொன்று - கொரோனா தொற்று இந்தியாவின் வர்த்தக முறையைப் பெரிய அளவில் மாற்றியுள்ளது. இந்த மாற்றத்தில் அவர்களால் இணைய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
என்ன பிரச்சனை
முதல் பிரிவினருக்குச் சரியான நிதியுதவியை அளித்து மீட்க முடியும், ஆனால் 2வது பிரிவில் இருப்பவர்களை வர்த்தகச் சந்தைக்குள்ள கொண்டு வருவது மிகவும் கடினம். பாதிக்கப்பட்டு உள்ள வர்த்தகங்களுக்குப் போதிய அளவிலான வசதிகள், வாய்ப்புகள் அளிக்கப்பட்டுக் கட்டாயம் மீட்க வேண்டும் என்று உதய் கோட்டாக் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அலைகள்
கொரோனா முதல் அலை, 2வது அலை என இந்திய மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், 3வது அலை விரைவில் வரும் எனக் கணிப்பு வெளியானது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
மக்கள் பாதிப்பு
லாக்டவுன், ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம் ஒருபுறம் மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கும் நிலையில் மறுப்புறம் கொரோனா தொற்றால் போராடி வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய மக்கள் வருமானத்தை ஈடும் ஆதாயத்தை இழந்து அடிப்படை தேவைகளைப் பூர்த்திச் செய்துகொள்ள முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.
கோட்டாக் மஹிந்திரா வங்கி - உதய் கோட்டாக்
இந்நிலையில் இந்த நிலையை மாற்ற முக்கியமான யோசனையைக் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோட்டாக் இந்த முக்கியமான யோசனையைத் தெரிவித்துள்ளார். இதை எப்படி மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கையாளப் போகிறது என்பது தான் தற்போதைய கேள்வி.
வறுமை கோட்டிற்குக் கீழ்
இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் சுமார் 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டு உள்ளதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் கூறுகிறது. இந்தப் பாதிப்பில் பெண்களும், இளம் தலைமுறையினர் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வேலைவாய்ப்பை இழப்பு
மேலும் இந்தியாவில் 2020 லாக்டவுனில் இருந்து சுமார் 10 கோடி மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதில் 15 சதவீதம் மக்கள் இன்னமும் வேலைவாய்ப்புகளைப் பெற முடியாத நிலையில் தான் சிக்கியுள்ளனர்.