இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் உபயோகத்தில் சுமார் 85% அண்டை நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது.
இதனால் தான் அண்டை நாடுகளில் ஏதேனும் பிரச்சனை என்றாலும் கூட, இங்கு பெட்ரோல் டீசல் விலை உச்சம் தொடுகிறது.
போதாக்குறைக்கு இங்கு வரி விகிதமும் அதிகம் என்பதால், சமீபத்தில் சில நகரங்களில் செஞ்சுரி அடித்தது.
கொரோனாவால் தேவை வீழ்ச்சி
தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தினால் குறைந்த தேவையானது, மீண்டு வர தொடங்கியுள்ளது. ஏன் ஓரளவுக்கு தேவை மீண்டும் வந்துள்ளது. இதற்கிடையில் கொரோனா காலத்தில் கச்சா எண்ணெய் தேவையானது முடங்கிய நிலையில், கச்சா எண்ணெய் விலையானது அதல பாதாளம் நோக்கி சென்றது. ஒரு கட்டத்தில் மைனஸில் கூட சென்றது நினைவுகூறத்தக்கது.
உற்பத்தி குறைப்பு
அந்த சமயத்தில் அதிகப்படியான விலை சரிவினை மேற்கொண்டு தடுக்க, ஓபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியினை கூட்டாக குறைத்தன. ஆனால் தற்போது இந்தியா உள்பட பல நாடுகளிலும் கடுமையான லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துகள் இயங்க ஆரம்பித்துள்ளன. தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு
இப்படி ஒரு நிலையில் தான் இந்தியா சவுதியிடம் எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க கேட்டது. ஆனால் சவுதி ஆசியாவின் சில சுத்திகரிப்பாளர்களுக்கு சப்ளையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியது. எனினும் இந்தியாவுக்கு குறைக்க மாட்டோம். ஆனால் அதிகப்படியான எண்ணெய் அனுப்ப முடியாது என நிராகரித்து விட்டது.
தனியார் வாகன பயன்பாடு அதிகரிப்பு
ஆனால் இந்தியாவில் ஏற்கனவே விலை உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், இன்னும் எரிபொருட்கள் விலை அதிகரிக்குமோ என்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான், இந்தியா சவுதியிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்து, அமெரிக்காவிடம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் அச்சம் காரணமாக, மக்கள் தனியார் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் திட்டம்
இதனால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வலுவான தேவை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயில் சுத்திகரிப்பாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மே மாதத்தில் இருந்து சவுதியிடம் எண்ணெய் இறக்குமதியை குறைக்க அல்லது நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவிடம் இருந்து அதிகம் வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி அதிகரிப்பு
குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட இடங்களில், ஒரு டெண்டரை உருவாக்கியுள்ளதாகவும் தெரிகிறது. சவுதியிடம் இருந்து முந்தைய மாதத்தினை விட ஜனவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி 36% வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே நேரம் அமெரிக்காவிடம் இருந்து இருமடங்கிற்கும் அதிகமாக இறக்குமதி அதிகமாகி உள்ளதாக அரசாங்க தரவுகள் காட்டுகின்றன.