உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா போட்ட தடை உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் கடந்த சில மாதங்களாகச் சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
எனவே விரைவில் கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரியை குறைக்கலாம் என மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தவல்கள் வெளியாகியுள்ளது.
இறக்குமதி
உலக நாடுகளில் சமையல் எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. தங்களது தேவைக்கு 55 சதவீதத்திற்கும் அதிகமாகச் சமையல் எண்ணெய்யை இறக்குமதியை நம்பிதான் இருக்கிறது. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 7.2 மில்லியன் டன் பாமாயிலை இந்தோனேசியாவிலிருந்தும், 5.4 மில்லியன் டன் பாமாயிலை மலேசியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறது.
தடை
கடந்த சில மாதங்களாக இந்தோனேசியாவில் பாமாயில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. எனவே விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பாமாயில் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்தது. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது.
இந்திய அரசு முயற்சி
எனவே இந்திய அரசு சமையல் எண்ணெய் விலையைக் குறைக்க பாமாயில், சோயா பீன் எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட பலவேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால் அவை சர்வதேச சந்தையில் மேலும் விலையை அதிகரிக்கும்படி செய்ததால், அந்த முடிவை இந்திய அரசு கைவிட்டது.
மீண்டும் வரி குறைப்பு
எனினும், இப்போது விலையைக் குறைக்க மீண்டும் கனோலா எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய் மற்றும் பாம் கர்னல் எண்ணெய் மீதுள்ள 35 சதவீத இறக்குமதி வரியை, 5 சதவீதமாகக் குறைக்க இந்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது நடந்தால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை பெரும் அளவில் குறையும் என கூறுகின்றனர்.
ஜூன் மாதம்
இந்தோனேசியா அரசு பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதித்து இருந்தாலும், தேவைக்கு அதிகமாக பாமாயில் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. அவர்களிடம் அதை சேமித்து வைக்க போதிய வசதிகள் இல்லை. அதிகபட்சம் 15 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் பாமாயில் ஏற்றுமதியைத் தொடங்குவார்கள். என்னை பொறுத்தவரையில் மே 10-ம் தேதி இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. அப்படி செய்தால் ஜூன் மாதம் இறுதியில் சமையல் எண்ணெய் விலை 15 சதவீதம் குறையும் என அதானி வில்மர் தலைமை நிர்வாக அதிகாரி ஆங்ஷு மல்லிக் புதன்கிழமை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.