டெல்லி: இந்தியா உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து அரசு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காப்பர் மற்றும் அலுமினியம் இறக்குமதியினை சீனாவில் இருந்து செய்யப்படுவதை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக லைவ் மிண்ட் கூறுகின்றது.
இதனால் விரைவில் இறக்குமதியாளர்கள் தங்களது பொருட்களை இறக்குமதி செய்ய பதிவு செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் இருந்து இறக்குமதி
இந்தியா காப்பர் மற்றும் அலுமினியம் இறக்குமதியினை பல நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்தாலும், அதிகளவில் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தடை செய்ய திட்டம்
அரசின் இந்த நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்க உதவும், இதனால் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இறக்குமதியினை குறைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியினை அதிகரிக்கவும் இந்திய அரசும் உந்துதலை அளித்து வருகின்றது. இந்த நிலையில் தான் காப்பர் மற்றும் அலுமினியம் இரண்டு இறக்குமதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
முதல் கட்ட நடவடிக்கை
இதன் முதல் கட்ட நடவடிக்கையாக தனிப்பட்ட இறக்குமதியாளர்கள் காப்பர் மற்றும் அலுமினியம் இறக்குமதி செய்ய வேண்டுமெனில், அரசிடம் அனுமதி பெற வேண்டும். அல்லது விரைவில் பதிவு செய்ய வேண்டி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது தற்போது விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.
காப்பர் இறக்குமதி
காப்பர் ஏற்றுமதியில் சீனா, ஜப்பான், மலேசியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகியவை முன்னணி நாடுகளாக உள்ளன. இந்திய கடந்த 2019 - 20ம் ஆண்டில் மொத்த காப்பரில் 45% இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதாவது 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள காப்பர்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் அரசு தரவுகள் சொல்கின்றன.
அலுமினிய தொழிலுக்கு சீனா அச்சுறுத்தல்
இதே தொழில்துறையில் அதிகளவு பயன்படுத்தும் மற்றொரு உலோகமான அலுமினியம் இறக்குமதியிலும் சீனா தான் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் அலுமினிய தொழிலுக்கு சீனா ஒரு பெரிய அச்சுறுத்தல் என பிமியின் இணை பொதுச் செயலாளர் பிகே பாட்டியா தெரிவித்துள்ளார்.
மலிவு விலையில் இறக்குமதி
ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவின் அலுமினிய தேவையில் சுமார் 58 சதவீதம் ஸ்கிராப் இறக்குமதியால் பூர்த்தி செய்யப்பட்டது. அவை உள்நாட்டு முதன்மை அலுமினியத்தினை விட 22 சதவீதம் மிக மலிவான விலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் துறை தரவுகள் கூறுகின்றன.
சீனாவுக்கு எதிரான நடவடிக்கை
இந்தியா கடந்த 2019 - 20 ம் நிதியாண்டில் 4.4 பில்லியன் டாலர் மதிப்பிலான அலுமினியத்தினை இறக்குமதி செய்துள்ளது. இதில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான அலுமினியத்தினை சீனா இறக்குமதி செய்தது. ஏற்கனவே சீனா இந்தியா இடையேயான எல்லை பிரச்சனையில பல வர்த்தக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கையும் வந்துள்ளது.