இந்திய பொருளாதாரத்துக்கு, மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பங்களித்து வருவதை நாம் அறிவோம். அதற்கு இந்த மாநிலங்களில் இருக்கும் தொழில் துறையும் ஒரு முக்கிய காரணம்.
அப்படி என்றால் இந்த பெரிய மாநிலங்களில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியப் பொருளாதாரத்திலும் பெரிய அளவுக்கு எதிரொலிக்கும் என்று தானே பொருள்.
இப்போது அப்படி ஒரு விஷயம் தான் வெளியாகி இருக்கிறது. மின்சார பயன்பாடு தான் அதிர்ச்சிக்குரிய விஷயம்
மின்சாரம்
ஒரு நாட்டில் எந்த ஆளவுகு மின்சாரப் பயன்பாடு அதிகரித்துக் கொண்டு இருக்கிறதோ, அந்த அளவுக்கு, அந்த நாட்டில் தொழில் வளர்ச்சி கண்டு பொருளாதாரம் வளர்கிறது என்று சொல்வார்கள். அதிலும் குறிப்பாக தொழிற்சாலைகள் இருக்கும் மாநிலங்களில், வீட்டு உபயோகம் மற்றும் தொழிற்சாலை உபயோகத்து செலவாகும் மின்சாரத்தையும் பிரித்து விடலாம்.
இந்தியாவில் எது
நம் இந்திய நாட்டில், ஒரு ஆண்டில் செலவாகும் மொத்த மின்சாரத்தில் சராசரியாக 40 சதவிகித மின்சாரம் மட்டுமே தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செலவாகின்றன. மீதமுள்ள, 60 சதவிகித மின்சாரத்தில் பெரும்பாலும் வீட்டு உபயோகத்துக்கே செலவாகி வருகின்றனவாம். சரி எந்த மாநிலங்களில் தொழிற்சாலைகளுக்கு அதிக மின்சாரம் செலவழிக்கிறார்கள்..?
மாநிலங்கள்
இந்தியாவில் தொழில் நகரங்களாக அறியப்படும் மாநிலங்களில், முதல் இரண்டு இடத்தில் இருப்பது மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தான். இந்த மாநிலங்களில், ஒரு ஆண்டில் செலவாகும் மொத்த மின்சாரத்தில் கணிசமான பகுதியை தொழிற்சாலைகளுக்கு வழங்குகிறார்களாம். மகாராஷ்டிராவில் 46 சதவிகிதமும், குஜராத்தில் 54 சதவிகித மின்சாரமும் தொழிற்சாலைகள் பயன்படுத்தி வருகிறார்களாம்.
ஆகஸ்ட் - நவம்பர்
இந்த 2019 - 20 நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மின்சார நுகர்வு சரிந்து வந்தாலும், குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் முதல், மின்சார நுகர்வு தரை தட்டத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2019 முதல் நவம்பர் 2019 மாத காலத்தில் ஒட்டு மொத்த இந்தியாவில் மின்சார நுகர்வு 4.7 % குறைந்து இருக்கிறது.
மாநிலங்கள்
இந்த ஆகஸ்ட் - நவம்பர் 2019 காலத்தில், இந்திய தொழிற்சாலை மாநிலங்களான மகாராஷ்டிராவில் 13.2 % மின்சார நுகர்வு சரிந்து இருக்கிறது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 12.5 % சரிந்து இருக்கிறது. ஆகஸ்ட் 2018 முதல் நவம்பர் 2018 வரையான மின்சார நுகர்வுடன், ஆகஸ்ட் 2019 - நவம்பர் 2019 வரையான மின்சார நுகர்வை ஒப்பிட்டால் கிடைக்கும் தரவுகள் இவை.
மரண அடி அக்டோபர்
அக்டோபர் 2018-ம் மாதத்துக்கான மின்சார நுகர்வையும், அக்டோபர் 2019-ம் மாதத்துக்கான மின்சார நுகர்வையும் ஒப்பிட்டால், ஒட்டு மொத்த இந்தியாவில் 12.5 % மின்சார நுகர்வு சரிந்து இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் 21.2 சதவிகிதமும், குஜராத்தில் 18.8 சதவிகிதமும் மின்சார நுகர்வு சரிந்து இருக்கிறது. இந்தியாவின் பண்டிகை காலமான அக்டோபரிலேயே மின்சார நுகர்வு குறைந்து இருப்பது, வியாபாரம் எந்த அளவுக்கு படுத்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.
ஆண்டு வாரியாக கணக்கு
கடந்த 2016 - 17 நிதி ஆண்டை விட 2017 - 18 நிதி ஆண்டில், இந்தியாவின் மின்சார நுகர்வு 6.1 % அதிகரித்தது. அதே போல 2017 - 18-ஐ விட 2018 - 19 நிதி ஆண்டில் மின்சார நுகர்வு 5.2 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து. இப்போது 2018 - 19 (ஏப்ரல் - நவம்பர்) உடன், 2019 - 20 (ஏப்ரல் - நவம்பர்) நிதி ஆண்டு தரவுகளை ஒப்பிட்டால் 1.3 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடைந்து இருக்கிறது.
தெளிவு
ஆக கடந்த மார்ச் 2018-ல் இருந்து, இந்தியாவில் மின்சார நுகர்வு தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே இந்தியாவின் தொழில் துறை உற்பத்தியும் பாதிக்கப்படுகின்றன. கடந்த அக்டோபர் 2019 இந்திய தொழில் துறை உற்பத்தித் 3.8 சதவிகிதம் குறைந்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக இந்தியாவில் பொருளாதார சரிவை, இந்த மின்சார தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த சரிவில் இருந்து மீள இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ தெரியவில்லை.