இந்தியாவின் பொருளாதார மந்த நிலை பற்றியும், பொருளாதார வளர்ச்சி பற்றியும் டிமானிட்டைசேஷன் காலத்தில் இருந்தே அதிகம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் வெகு ஜன மக்கள்.
பொருளாதாரம் சார்ந்த செய்திகளை மக்கள் அதிக கவனம் கொடுத்து கவனிக்கத் தொடங்கிய நேரத்தில் தான், இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்து இருக்கும் செய்தியும் வெளியானது.
இது போக ஏகப்பட்ட பொருளாதார பிரச்சனைகள் வேறு ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேர்ந்தது.
என்ன பிரச்சனைகள்
முதலீடு குறைந்தது, ஜிடிபி வளர்ச்சி சரிவு, தனி நபர் நுகர்வு குறைந்தது, வேலை வாய்ப்புகள் குறைந்ததால் மக்கள் கையில் பணம் புழங்குவது குறைந்தது, ஆட்டோமொபைல் விற்பனை சரிவு என தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இப்போது, இந்தியாவின் பொருளாதார மந்த நிலை சரியாகவில்லை என்றால் கோடிக் கணக்கான ரூபாய் காலியாக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது ஒரு ஆய்வு.
அறிக்கை விவரம்
இந்தியா ரேட்டிங் & ரிசர்ச் என்கிற நிறுவனம், இந்தியாவின் 500 தனியார் நிறுவனங்களை ஆராய்ந்து இருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவில் தான் சில எச்சரிக்கையான விஷயங்களைச் சுட்டிக் காட்டி இருக்கிறது இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் நிறுவனம். அப்படி என்ன எச்சரிக்கை செய்து விட்டார்கள் என்று கேட்கிறீர்களா..?
கடன் கணக்கு
இந்தியாவில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 64 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்களாம். அதில் அதிகம் கடன் வாங்கி இருக்கும் 500 நிறுவனங்களுக்கு 39.28 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்களாம். இந்த 39.28 லட்சம் கோடி ரூபாயில் ஏற்கனவே 7.35 லட்சம் கோடி ரூபாய் default ஆகிவிட்டது. அதாவது ஒழுங்காகத் திரும்பி வரவில்லையாம்.
எச்சரிக்கை
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இப்போது போலவே மந்தமாக வளர்ச்சி கண்டால், அடுத்த மூன்று ஆண்டு காலத்துக்குள், சுமாராக 2.54 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக default-ஆக, அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் நிறுவனம்.
செக்டார்கள்
தற்போது இந்தியாவில் இருக்கும் இரும்பு மற்றும் ஸ்டீல், குடியிருப்புக்காக வீடு கட்டும் ரியல் எஸ்டேட் துறை, பொறியியல், கட்டுமானம், மின்சார தயாரிப்பு மற்றும் சிக்கலிலேயே திளைக்கும் இந்திய டெலிகாம் போன்ற துறைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
வாராக் கடன்
ஒருவர் தான் வாங்கிய கடனை, அடுத்த 90 நாட்களுக்கு, வட்டியோ அல்லது அசல் தொகையோ அல்லது தன்னுடைய இ எம் ஐ-யையோ செலுத்தவில்லை என்றால், அப்படிபட்ட கடன்களைத் தான் வாராக் கடன்கள் (NPA) என, நம் மத்திய ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது. ஆனால் வாங்கிய கடனை ஒரு நாள் ஒழுங்காகச் செலுத்தவில்லை என்றால் கூட அவர்களை Defaulters (கடனை சரியாகத் திருப்பிச் செலுத்தாதவர்) எனச் சொல்ல முடியுமாம். எனவே முதலில் Defaulters-ஆக இருப்பவர்கள் தான், பின்னாளில் வாரா கடனாளியாக திரிவார்கள்.