எப்போது ஈரானும் அமெரிக்காவும் இடையே போர் தொடங்கியதோ அதிலிருந்து நம் நாட்டில் பல விலை உயர்வுகள். அதிலும் கமர்சியல் சிலிண்டர் விலை ரூ.3,000-த்தைக் கடந்தது. இப்படி இருக்கையில் விலை இனிமேலும் ஏறுமா? இல்லை இறங்குமா? சிலிண்டர் சப்ளை சரியாக நடக்குமா? என்ற பதற்றத்திலேயே பல ஹோட்டல் உரிமையாளர்கள் இருந்து வந்தனர். அவர்கள் மட்டுமல்ல சில தொழிற்சாலைகளுக்கும் கமர்சியல் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன.
ஆனால் சப்ளை குறைந்ததால் தொடர்ந்து சிலிண்டரின் விலை அதிகரித்தது. தற்போது ஹோட்டல் உரிமையாளர்களுக்கும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. கேஸ் சிலிண்டரின் விநியோகத்திற்கு அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கியுள்ளது. போருக்கு முன்பு எப்படி சிலிண்டர் சப்ளை கிடைத்ததோ அதேபோல தங்கு தடையின்றி சிலிண்டர் பெறலாம் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பிரச்சனைக்குக் காரணம் என்ன?: அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. அதற்காக ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தியது. ஈரான் முக்கியமான கடல்வழி பாதையான ஹார்மூஸ் ஜலசந்தியை மூடி வைத்திருந்தது. இதனால் தான் கடந்த சில மாதங்களாக சர்வதேச அரசியல் களம் ரணகளமாக இருந்தது. இந்த காரணத்தினால் இந்தியாவிற்குள் சப்ளை செய்யப்படும் எல்பிஜி சிலிண்டரும் சரியாக வரவில்லை.

போர் சமயத்தில் தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்குமான கேஸ் விநியோகத்தை குறைத்து அதை அப்படியே வீட்டு உபயோகத்திற்காக அரசு திருப்பியது. இதற்காக கேஸ் தயாரிக்க பயன்படும் முக்கிய சி3 மற்றும் சி4 வாயுக்களை வேறு எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த ஒரு காரணத்தினால் ஹோட்டல் உரிமையாளர்கள், தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள், சிறு குறு தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்படியே கேஸ் கிடைத்தாலும் விலை அதிகமாக இருக்கும் காரணத்தினால் அதை கொடுத்து வாங்க முடியாமல் திணறி வந்தனர்.
ஒரு சில ஹோட்டல் உரிமையாளர்கள் உணவுகளின் விலையை அதிகரித்து ஓரளவு நிவாரணம் பெற்றுக் கொண்டனர். ஆனால் இதே நடைமுறையை எல்லா ஹோட்டல் உரிமையாளர்களாலும் செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால் கேஸ் வரத்து மீண்டும் சீராக வரத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாகவே தற்போது அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இனி எப்பொழுதும் போல கமர்சியல் சிலிண்டர்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். தொழிற்சாலைகள் இனி எல்பிஜி கேஸ் பயன்படுத்தும் போது முன்பை போலவே 50 சதவீதம் வரை சப்ளை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சகம் கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கிறது. சரி கமர்சியல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சிலிண்டர் சப்ளை அதிகரித்தால் வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் சப்ளை குறையுமா? என்ற பயம் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால் இதையும் சீராக வழங்க அரசு உறுதி அளித்தியுள்ளது.
சப்ளை குறைந்ததால் இந்தியாவில் எல்பிஜி விலையும் அதிகரித்தது. மார்ச் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. ஜூன் மாதம் ரூ.29 உயர்த்தப்பட்டது. இதனால் வீட்டில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.942-ஐ எட்டியது. உணவகங்கள் மற்றும் வணிக ரீதியான கமர்சியல் சிலிண்டரின் விலை மே மாதத்தில் மட்டும் 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் 19 கிலோ எடையுள்ள கமர்ஷியல் சிலிண்டர் 3.113 ரூபாயாக இருக்கிறது.
மீண்டும் சிலிண்டர் வரத்து சரியாக தொடங்கியுள்ளது. இனிவரும் காலங்களில் ஏற்கனவே உயர்த்தப்பட்ட விலை குறையுமா? அல்லது மீண்டும் அதிகரிக்குமா? என்ற விபரங்கள் தெரியவரும்.


Click it and Unblock the Notifications