ஈரான் போரால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வராமல் , கேஸ் வராமல் பெரும் இன்னலை மக்களே தங்களின் அன்றாட வாழ்க்கையில் சந்தித்தனர். சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து பொருட்களின் விலைவாசியையும் எகிற வைத்துள்ளது.
கடந்த மாதம் ஈரானும் - அமெரிக்காவும் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கைக்கு வந்ததால் பிரச்சினை தீர்ந்தது என இந்தியா பெருமூச்சு விட்டது. ஆனால் மீண்டும் இரு நாடுகளும் போரை தொடங்கிவிட்டன. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே பிரச்சினையை தவிர்க்க இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், பாரம்பரியமான ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழிக்கு மாற்றாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா (Fujairah) மற்றும் கோர் ஃபக்கான் (Khor Fakkan) துறைமுகங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஈரான் போருக்கு முன்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60 சதவீதமும், எல்பிஜி இறக்குமதியில் 90 சதவீதமும் மேற்காசியாவிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வந்து கொண்டிருந்தன. தற்போது இந்த பகுதி அமெரிக்கா-ஈரான் மோதலின் மையமாக மாறியுள்ளதால், அந்த வழியாக பொருட்களை கொண்டு வருவது பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.
எனவே ஹார்முஸ் ஜலசந்திக்கு கிழக்கே அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா மற்றும் கோர் ஃபக்கான் துறைமுகங்கள் இந்தியாவிற்கு கைகொடுக்க தொடங்கியுள்ளன. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஹார்முஸை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகத்தின் 406 கி.மீ நீளமுள்ள ஹப்ஷான்-புஜைரா குழாய் தடத்தை பயன்படுத்தி கச்சா எண்ணெயை கொண்டு வருகின்றன.

அதே போல ஓமனின் சோஹர் துறைமுகமும் எரிசக்தி விநியோக மையமாக உருவெடுத்துள்ளது. சவுதி அரேபியா, தனது கச்சா எண்ணெயை செங்கடல் வழியாக யான்பு துறைமுகத்திற்கு அனுப்பி, அங்கிருந்து விநியோகிக்கிறது. இதனால் இந்திய நிறுவனங்கள் ஹார்முஸுக்கு மாற்று வழிகளாக இந்த துறைமுகங்கள் வழியே கச்சா எண்ணெய் ஏற்றி இந்தியாவுக்கு கொண்டு வர தொடங்கியுள்ளன.
இந்தியாவுக்கு தற்போது ரஷ்யாவுக்கு அடுத்ததாக கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளாக சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகள் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகளையும் துறைமுகங்களில் கூடுதல் டெர்மினல்களையும் ஏற்படுத்த தொடங்கியுள்ளன.எண்ணெய் நிறுவனங்கள் மாற்று வழிகளை கண்டுபிடித்தாலும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் நலனை பாதுகாக்கும் இந்த மாற்று பாதைகளையும் குறிவைப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 85.52 டாலராகவும் வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணெய் 80 டாலராகவும் உயர்ந்துள்ளது. போர் தீவிரமடைந்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து மீண்டும் பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உண்டாகும்.


Click it and Unblock the Notifications

