ஈரான் போர் காரணமாக கடந்த 7 மாதங்களாக உலக பொருளாதாரமே சற்று மந்தமடைந்துள்ள நிலையில் இந்தியா நல்ல பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின் படி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவிகிதமே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கணிப்புகளை எல்லாம் மிஞ்சி நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் நாட்டில் விவசாயம், சுரங்கத் துறைகள் மந்தமடைந்த நிலையில் தொழில்துறை உற்பத்தி, மின்சார துறை, கட்டுமான துறை ஆகியவை நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த தரவுகள் குறித்து எதிர்க்கட்சியினரும் பொருளாதார நிபுணர்களும் பல கேள்விகளை முன் வைக்கின்றனர். இந்த எண் உண்மைதானா என சந்தேகம் எழுப்புகின்றனர். இந்தியாவின் அதிகாரப்பூர்வ பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் உண்மையானவை தானா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், வளர்ச்சி கணக்கீடுகளில் பல முரண்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாம் இவ்வளவு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தால், ஏன் அதிகமான மற்றும் தரமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை? ஏன் புதிய முதலீடுகள் வரவில்லை? தொழிலதிபர்கள் ஏன் முதலீடு செய்ய தயங்குகிறார்கள்? நேரடி வெளிநாட்டு முதலீடுஏன் இன்னும் பெரிய அளவில் ஈர்க்கப்படவில்லை? என அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
எண்களை காட்டுவதை விட , நாட்டின் தற்போதைய உண்மையான தேவைகள் என்ன என்பதை பார்ப்பதே முக்கியம் என கூறும் அவர், ஜிடிபி வளர்ச்சி எண்களை பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?, நாம் வேலைவாய்ப்புகளை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோமா? நாட்டின் முன்னணி துறைகளில் நமது ஆதிக்கத்தை தக்கவைக்க தேவையான பணிகளை செய்து வருகிறோமா? என வினவியுள்ளார்.
இந்த இரண்டு கேள்விகளுக்கும் நம்மிடம் 'இல்லை' என்பதே பதிலாக இருந்தால், அங்கு ஒரு அடிப்படை பிரச்சனை உள்ளது என தெரிவிக்கும் அவர், வேலைக்கு வரும் இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றால், நாம் பெரிய வாய்ப்பை இழந்துவிடுவோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் , நாட்டின் ஜிடிபி விகிதம் குறித்த சில கேள்விகளை எழுப்பியுள்ளார். முந்தையா ஆண்டின் ஜிடிபி மதிப்பை அரசு பெருமளவில் குறைத்து (Downward revision) காட்டியுள்ளது என்கிறார். நடப்பாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உண்மையான வளர்ச்சி 2.6% மட்டுமே என கூறுகிறார்.
அதாவது முந்தைய ஆண்டின் அடிப்படை அளவை செயற்கையாக குறைத்ததன் மூலமாக, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி விகிதம் உயர்ந்திருப்பதை போல தெரிகிறது என கூறியுள்ளார். ஒருவேளை முந்தைய ஆண்டின் ஜிடிபி மதிப்பு குறைக்கப்படாமல் இருந்திருந்தால், நடப்பு விலைவாசி உயர்வின் அடிப்படையிலான உண்மையான வளர்ச்சி வெறும் 2.6% மட்டுமே இருந்திருக்கும் என கார்க் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் நுகர்வு போக்கு குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டும் கார்க், அரசு வெறும் எண்களை மட்டுமே தலைப்பு செய்தியாக காட்டிவிட்டு உண்மையான மக்கள் பிரச்சினைகளை மறைக்கிறதா என வினவியுள்ளார். அரசு அடிப்படை பொருளாதார பிரச்சினைகளை சரி செய்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

