இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் சீன முதலீட்டில் இயங்கினாலும், தொடர்ந்து இந்தியர் மற்றும் இந்திய நிர்வாகக் குழுவின் கீழ் இயங்கி வரும் காரணத்தால் எவ்விதமான தடுமாற்றமும் சரிவும் இல்லாமல் இயங்கி வருகிறது.
இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாகச் செபி-யிடம் சில மாதங்களுக்கு முன்பு விண்ணப்பம் கொடுத்தது.
இந்த விண்ணப்பத்திற்குச் செபி டபுள் ஓகே கூறியுள்ளது செபி.
பேடிஎம்
பேடிஎம் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் அனைத்திற்கும் தாய் நிறுவனமாக விளங்கும் ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக ஐபிஓ வெளியிட இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாகச் செபி ஒப்புதல் அளித்து நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
ஐபிஓ தானே
ஐபிஓ தானே இதில் என்ன ஸ்பெஷல், அதுதான் வாரத்திற்கு ஒரு நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு முதலீட்டைத் திரட்டுகிறதே என்று கேட்பவர்களுக்கு ஒரு நல்ல பதில் உள்ளது. இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட்டுப் பேடிஎம் சாதனை படைக்கப் போகிறது.
16,600 கோடி ரூபாய் ஐபிஓ
ஆம், செபி அமைப்பு இன்று பேடிஎம் நிறுவனத்திற்குக் கொடுத்த ஒப்புதலில், ஐபிஓ மூலம் பேடிஎம் சுமார் 16,600 கோடி ரூபாய் அளவில் முதலீட்டைத் திரட்ட முடியும். இந்தியாவில் எந்த ஒரு நிறுவனமும் இதுவரை 16,600 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஐபிஓ மூலம் முதலீடாகத் திரட்டியது இல்லை.
நவம்பர் மாதம் ஐபிஓ
பேடிஎம் நிறுவனத்தின் திட்டத்தின் படி நவம்பர் மாத துவக்கத்தில் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது. ஆனால் கட்டாயம் இந்த வருடம் முடிவதற்குள் ஐபிஓ வெளியிடுவது உறுதியாகியுள்ளது. சோமேட்டோ வெற்றிக்கு பின்பு இந்திய பங்குச்சந்தைக்கு வரும் 2வது பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனம் பேடிஎம்.
இந்திய ஸ்டார்ட்அப்
சமீபத்தில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஐபிஓ வெளியிட்டு வருகிறது, முதலில் மும்பை பங்குச்சந்தையில் சோமேட்டோ, அதன் பின்பு அமெரிக்கச் சந்தையில் பிரஷ்வொர்க்ஸ், அதைத் தொடர்ந்து நைகா வருகிற அக்டோபர் 28ஆம் தேதி, அதைத் தொடர்ந்து பாலிசிபஜார், மொபிகிவிக், பைன் லேப்ஸ், டெல்வரி ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் தயாராக உள்ளது. இதற்கிடையில் பேடிஎம் செபியிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.