ஸ்மார்ட்சிட்டி, வீட்டு வசதி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம் என இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த ரியல் எஸ்டேட் துறை கொரோனாவால் வழி தெரியாமல் நிற்கிறது என்றால் மிகையில்லை. ஆம் அதிலும் குறிப்பாகக் கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊழியர்களுக்கு Work From Home சலுகை கொடுக்கப்பட்டதால் Office Leasing சந்தை மிகப்பெரிய பாதிப்பை வெறும் 6 மாத காலத்தில் எதிர்கொண்டுள்ளது.
இது இந்திய ரியல் எஸ்டேட் துறையை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கமர்சியல் ரியல் எஸ்டேட் துறையில் முதன்மையாக விளங்கும் டெக் நகரமான பெங்களூர் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது..
Office Leasing சந்தை
2020ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் இந்தியாவில் டாப் 8 நகரங்களில் மட்டும் Office Leasing வர்த்தகம் 37 சதவீதம் குறைந்து 17.2 மில்லியன் சுதுரடியாகக் குறைந்துள்ளது. இது கடந்த 10 வருடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக விளங்குகிறது.
இக்காலகட்டத்தில் சுமார் 6.3 மில்லியன் சதுரடி அலுவலகங்கள் தங்களது குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து திருப்பிக் கொடுத்துள்ளது. இதில் 50 சதவீதம் பெங்களூரை மட்டுமே சார்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில், நிறுவனங்கள் வர்த்தகமும் வருவாயும் இல்லாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் வேளையில் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க அலுவலகத்தை மூடியுள்ளது.
காரணம் பெரு நகரங்களில் அலுவலகம் மற்றும் அதன் பராமரிப்பு கட்டணம் மிகவும் அதிகம். இதைத் தவிர்ப்பதன் மூலம் நிறுவனங்கள் பெருமளவிலான தொகையைச் சேமிக்க முடியும்.
அதிரடி உயர்வு
இன்போசிஸ், விப்ரோ, பிளிப்கார்ட், சிஸ்கோ, அமேசான், மைக்ரோசாப்ட், கூகிள் போன்ற முன்னணி நிறுவனங்கள் அலுவலகங்கள் அமைத்திருக்கும் பெங்களூரில் தற்போது காலியாக இருக்கும் அலுவலகங்களின் இடம் மட்டும் 6.5 சதவீதமாக அதிகரித்து உள்ளது. மேலும் 2020ஆம் ஆண்டு முடியும் காலகட்டத்தில் அதன் அளவு கணிசமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அலுவலகங்கள்
கொரோனாக்கு பின்பு, அலுவலகத்திற்குப் பகுதி வாடகையும், பராமரிப்பு கட்டணத்தை முழுமையாகவும் குறைக்க வேண்டும் என அலுவலக உரிமையாளர்களுக்குக் கட்டாயக் கோரிக்கை வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலை மாற நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலை மேம்படும் வரை இயல்பு நிலைக்கு மாறாது எனத் தெரிகிறது.
டெக் பார்க்
மேலும் டெக் பார்க்-ல் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்களும், பெரும் நிறுவனங்களும் தங்களது அலுவலகத்தைக் காலி செய்யவில்லை எனத் தெரிகிறது. தற்போது காலி செய்யப்பட்ட அலுவலகங்கள் அனைத்தும் நிதி நெருக்கடியிலும், போதிய வருமானம் மற்றும் வர்த்தகம் இல்லாத நிறுவனங்கள் எனக் கூறப்படுகிறது.