டெல்லி: காப்பர் உற்பத்தியில் கணிசமான அளவை தன்னகத்தே கொண்டிருந்த இந்தியா, நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதத்தில் 6.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் நிலவி வரும் மந்த நிலையாலும் காப்பர் உற்பத்தி கணிசமான அளவு குறைந்துள்ளது.
இதோடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் விளைவின் காரணமாகவும், நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் காப்பர் உற்பத்தியானது 6.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 229.1 ஆயிரம் டன்களாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உற்பத்தி வீழ்ச்சி
அதிலும் ஏப்ரல் - அக்டோபர் 2018 வரையிலான காலத்தில் மொத்த காப்பர் உற்பத்தியானது 50 சதவிகிதம் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2014 - 2015 முதல் 2017 - 2018ம் ஆண்டு வரையிலான தொடர்ச்சியான மூன்று ஆண்டுகளில் வளர்ச்சி கண்ட பின், 2017- 2018ல் 4.1 சதவிகிதம் வளர்ச்சி வீழ்ச்சி கண்டது. இதுவே 2018 - 2019ல் 40.3 சதவிகிதம் அளவுக்ல்கு படு வீழ்ச்சி கண்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடல்
நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவிகிதம் பங்கு வகிக்கும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின், இந்தியா காப்பர் உற்பத்தியில் மிகவும் பின் தங்கியுள்ளது. அதிலும் தற்போது நிலவி வரும் மந்த நிலையின் காரணமாக மற்ற இடங்களில் காப்பர் உற்பத்தி செய்து வரும் சில நிறுவனங்களும் உற்பத்தியில் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனால் நாட்டின் காப்பர் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளது. குறிப்பிட்டு சொல்லப்போனால் உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உற்பத்தி எவ்வளவு?
இது குறித்து பிசினஸ் டுடேவில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், காப்பர் உற்பத்தி ஏப்ரல் - அக்டோபர் 2015 - 2016ம் ஆண்டில் 458.7 ஆயிரம் டன்னாக இருந்துள்ளது. இதே காலத்தில் 2016 - 2017ம் வருடத்தில் 5.7 சதவிகிதம் குறைந்து 432.7 ஆயிரம் டன்னாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனினும் 2017 - 2018ல் இதே மாதங்களில் 12.5 சதவிகிதம் உற்பத்தி அதிகரித்து 486.7 ஆயிரம் டன்னாக உற்பத்தி அதிகரித்துள்ளது. எனினும் 2018 - 2019ல் 49.7 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு வெறும் 244.9 ஆயிரம் டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இதே காலத்தில் 6.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 229.1 ஆயிரம் டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
யார் யார் எவ்வளவு உற்பத்தி?
இந்தியாவில் காப்பர் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்டெர்லைட் காப்பர், ஹிண்டால்கோ காப்பர், ஹிந்துஸ்தான் காப்பர் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் உள்ளன. CMIE- யின் அறிக்கையின் படி, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் உற்பத்தி 23.5 சதவிகிதம் குறைந்து 35.5 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இதே காலத்தில் ஹிண்டால்கோவில் முந்தைய உற்பத்தியான 190 ஆயிரம் டன்னாக பராமரிக்க முடிந்ததாக கூறப்படுகிறது. இதே ஹிந்துஸ்தான் காப்பரில் இருந்து 4.1 ஆயிரம் டன்னாக (பாதியாக ) குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே ஏப்ரல் - அக்டோபர் 2018ல் 8.4 ஆயிரம் டன்னாக இருந்தது.