இந்தியாவில் கொரோனாவின் வருகைக்கு பிறகு பல்வேறு சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது மிக மோசமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் - டிசம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் 23 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இதுவே கடந்த ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் 9.9 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்
இது நாட்டில் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக, பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் அக்டோபர் -- டிசம்பர் 2020 காலக்கட்டத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது வெறும் 2.2 பில்லியன் டாலர் தான்.
9 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசம்
இதுவே கடந்த டிசம்பர் காலாண்டில் 23 பில்லியன் டாலர். இந்த அதிகரிப்பானது 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. கடந்த 2012ல் இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை விகிதம் 31.8 பில்லியன் டாலராகும்.
கச்சா எண்ணெய் விலையேற்றமும் காரணம்
இதே சதவீத அடிப்படையில் பார்த்தால் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7% ஆக இருந்தது. இதுவே முந்தைய காலாண்டில் 1.3% ஆகவும் இருந்தது.
கடந்த செப்டம்பர் காலாண்டில் இறக்குமதியானது 111.8 பில்லியன் டாலராக இருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 169.4 பில்லியன் டாலராகும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வருவது, நடப்பு கணக்கு பற்றாக்குறையை பெரிதும் உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக இந்த டிசம்பர் காலாண்டில் இதுவரை இல்லாத அளவாக 60.4 பில்லியன் டாலராக வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
சேவை துறையில் உபரி
இதுவே சேவை துறையில் வர்த்தக உபரியாக டிசம்பர் காலாண்டில் 27.8 பில்லியன் டாலராக இருந்தது. இது கட்னத செப்டம்பர் காலாண்டில் 25.6 பில்லியன் டாலராக இருந்தது. இது சேவையில் துறஒயொல் தொடர்ந்து வலுவான தேவைக்கு மத்தியில், ஏற்றுமதி அதிகரித்துள்ளதே காரணம்.
இக்ரா எச்சரிக்கை
4வது காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது 17 -21 பில்லியன் டாலராக குறையும் என நாங்கள் நம்புகிறோம். 3வது அலையானது தற்காலிகமாக இறக்குமதியினை சற்று குறைக்கலாம் என்று இக்ரா-வின் தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் எச்சரித்துள்ளார். மேலும் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் காரணமாக 2023ம் நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது 95 பில்லியன் டாலராக அதிகரிக்க கூடும்.