டெல்லி: இந்தியாவில் ஏற்றுமதி விகிதமானது தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக வீழ்ச்சி கண்டு வருகிறது. அதிலும் செப்டம்பர் மாதத்தில் பலமான வளர்ச்சியினை கண்ட பிறகு, தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக வீழ்ச்சியில் இருந்து வருகின்றது.
இந்தியாவின் மிகப்பெரிய சந்தையான ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக தேவையானது பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட திருத்தப்பட்ட வர்த்தக தரவுகளின் படி, ஏற்றுமதி 8.7 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதே சமயம் இறக்குமதியும் 13.3% வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் விளைவாக பற்றாக்குறையும் 9.9 பில்லியன் டாலராக உள்ளது.
இதற்கிடையில் சீனாவின் ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் 21.1% அதிகரித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி 2018-லிருந்து ஒப்பிடும்போது அதிகமாகும். எனினும் இறக்குமதியும் 4.5% வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் வர்த்தக உபரியானது 75.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்களான பெட்ரோலிய பொருட்கள் -59.7%மும், பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியானது -8.1%மும், கெமிக்கல் பொருட்கள் ஏற்றுமதியானது -8.1%மும், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியானது -1.2%மும் குறைந்துள்ளது. இதே மருந்துகள் ஏற்றுமதி 11.1%ம் அதிகரித்து, கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதியானது 4.1%மும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியானது 1% -மும் வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன.
இதே இரும்பு அல்லாத உலோகங்கள் 9.1%மும் ரசாயன பொருட்கள் ஏற்றுமதியானது 36.1%மும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியானது 12.3%மும், உரங்கள் 29.3%மும், தங்கம் 2.7% ஏற்றுமதி வளர்ச்சியினையும் பதிவு செய்துள்ளன.
கொரோனா தாக்கம் பொருளாதாரத்தினை தாக்கும் முன்பே இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தேவை பலவீனமடைந்துள்ளது. ஜூன் 2019 தொடங்கி கடந்த 17 மாதங்களில் 15 மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி எதிர்மறையான வளர்ச்சியினையே கண்டுள்ளது. எனினும் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரட்டை இலக்கில் வீழ்ச்சியடையத் தொடங்கின. எனினும் இது தற்காலிகமாக கடந்த ஜூன் மாதத்தில் வர்த்தக உபரிக்கு 18 ஆண்டுகளில் முறையாக வழிவகுத்தது.
உலக வர்த்தக அமைப்பின் தரவின் படி, கடந்த ஜூன் காலாண்டில் உலகளாவிய வர்த்தகம் 21% குறைந்துள்ளது. எனினும் 2020ம் ஆண்டில் வர்த்தகம் 9.2% சரிந்தும், இதே 2021ம் ஆண்டில் 7.2% அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது.