இந்தியாவில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்வு அளிக்கப்பட்டு வந்த காரணத்தால் தற்போது நாட்டின் உற்பத்தி துறை தொடர்ந்து 2வது மாதமாக வளர்ச்சியை அடைந்துள்ளது.
அக்டோபர் மாதம் நாட்டின் வர்த்தகச் சந்தை சிறப்பான வளர்ச்சி அடைந்த காரணத்திற்காகவும், நவம்பர் மாத விழா கால விற்பனைக்குத் தயாராகும் காரணத்திற்காகவும் நாட்டின் தொழிற்துறை அக்டோபர் மாதத்தில் 3.6 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியான தகவல்களின் படி அக்டோபர் மாதத்தில் நாட்டின் உற்பத்தி துறை 3.5 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது, இதேபோல் மின்சாரத் துறை 11.2 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் சுரங்க துறை இக்காலகட்டத்தில் -1.5 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆனால் இந்த வளர்ச்சி தொடர்ந்து நீடிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு எனப் பொருளாதார வள்ளுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகளவில் தளர்வு செய்யப்பட்ட காரணத்தாலும், வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகளவில் குறைந்துள்ளதாலும், சந்தையில் பண்டிகைக்கால டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தாலும் அக்டோபர் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி சிறப்பாக இருந்துள்ளது.
ஆனால் இதே தேவை மற்றும் வர்த்தகம் அடுத்தடுத்த மாதங்களில் இருக்காது என்பதால் நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறையில் சரிவு ஏற்படும் எனப் பொருளாதார விளக்கம் அளிக்கின்றனர்.
மேலும் அக்டோபர் மாதத்தில் பொருளாதாரத்தில் புதிய முதலீட்டு அளவை உணர்த்தும் கேப்பிடல் கூட்ஸ் 3.3 சதவீதம் வளர்ச்சியை அடைந்துள்ளது. இதேபோல் கன்ஸ்யூமர் கூட்ஸ் பிரிவு 17.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் நுகர்வோர் அல்லாத பொருட்கள் 7.5 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.