டெல்லி: நடப்பு நிதியாண்டில் கொரோனா தாக்கத்தின் காரணமாக பொருளாதாரம் என்ன ஆகுமோ? என்ற கவலை ஒரு புறம் இருந்து வருகிறது. மறுபுறம் நிதி பற்றாக்குறையும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
இதற்கிடையில் இன்று வெளியாக இடி செய்தியொன்றில் நடப்பு நிதியாண்டில் ( 2020- 2021ல்) நிதி பற்றாக்குறையானது 7 சதவீதத்தினை தொடலாம் என்று பிரிக்ஒர்க் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் இந்த நிதி பற்றாக்குறையானது 3.5 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தம், நாடு தழுவிய லாக்டவுன் போடப்பட்டது தான் என்கிறது இந்த அறிக்கை. இதன் காரணமாக பொருளாதாரம் வளர்ச்சி குறித்தான அனைத்து நடவடிக்கைகளும் தடைப்பட்டது. இதன் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் கிடைக்கவில்லை. இதனால் பெருத்த நிதி பற்றாக்குறையே நிலவி வருகிறது.
இது குறித்து கன்ட்ரோலர் ஆஃப் ஜெனரல் அக்கவுண்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மத்திய அரசின் வருவாயானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது மிக குறைவாகும்.
இதே வருமான வரிகளின் வருவாய் (தனி நபர் வருமான வரி, கார்ப்பரேட் வரி வருவாய்) 30.5 சதவீதமும், இதே ஜிஎஸ்டி வசூலானது 34 சதவீதமும் குறைந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன. இதில் கவனிக்கதக்க மற்றொரு விஷயம் என்னவெனில், நிதிப்பற்றாக்குறை நிலவி வரும் இந்த நெருக்கடியான காலத்தில் கூடுதல் செலவுகள் காரணமாக செலவினங்கள் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. அதிலும் இந்த செலவினங்கள் முன்பை விட 13.1 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இது மக்கள் கொரோனா நெருக்கடியினால் தத்தளித்து வரும் நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆத்மா நிர்பார் திட்டத்தின் மூலமும், இன்னும் சில திட்டங்கள் மூலமாகவும் ஊக்குவிப்பு தொகையாக வழங்கப்பட்டது.
இதன் காரணமாக முதல் காலாண்டில் அரசு நிர்ணயித்த இலக்கினை விட, 83.2 சதவீதம் நிதிபற்றாக்குறையானது அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இந்த நிதியாண்டில் மூன்றாம் காலாண்டில் இருந்து பொருளாதாரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலை தொடர்ந்தால், அரசு பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அரசின் வருவாயும் பாதிக்கபப்டும் என்றும், இது முன்பு மதிப்பிட்டதை விட மிக மோசமாக பாதிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதே மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது அமெரிக்கா மட்டுமே இந்தியாவினை விட அதிக நிதி பற்றாக்குறையினால் தத்தளித்து வரும் நிலையில், இந்தியா அடுத்த இடத்தில் உள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.