உலகம் முழுக்க கொரோனாவின் கோரத் தாண்டவத்தினால் கடந்த சில மாதங்களாக முடக்கத்தில் இருந்த வாகனங்களானது மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளன.
சொல்லப்போனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் விலையானது மைனஸில் சென்று திரும்பியது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லாமல் அப்போது காணப்பட்டது.
அந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. ஏன் கச்சா எண்ணெய் வைக்கக்கூட இடமில்லாமல் போனது. அதே சமயம் கொரோனாவின் தாக்கத்தினால் உலகம் முழுக்க பல நாடுகளில் லாக்டவுன் செய்யப்பட்டது. இதன் காரணமாக சாலைகளில் அடிக்கடி சென்று கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம், வீட்டில் மூலையில் முடங்கி போயின. மேலும் இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக விமான சேவையும் நிறுத்தப்பட்டது. தொழில் சாலைகளும் முடங்கின. இப்படி எந்த விதத்தில் பார்த்தாலும் எரிபொருள் தேவையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தது. இதன் காரணமாகத் தான் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தது.
ஆனால் இந்திய சந்தையினை பொறுத்தவரையில் அதன் பலன் மக்களுக்கு சென்றடையவில்லை எனலாம். அதனை கலால் வரியாக உயர்த்தி அந்த பலனை அரசே எடுத்துக் கொண்டது. இது கொரோனாவினால் முடங்கி போன வருவாய்க்கு மத்தியில் மிக உபயோகமாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.
ஆனால் தற்போது இந்தியா உள்பட பல நாடுகளிலும் பலவித கட்டுப்பாடுகளுடன் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் தேவையான அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதே நேரம் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் கொண்டு வர ஓபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியினையும் குறைத்துள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது சில வாரங்களாக கிடு கிடுவென ஏற்றம் கண்டு வருகிறது. மேலும் இது கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் தேவையானது 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருந்த நிலையில், ஜூன் மாதத்தில் கிட்டதட்ட 11% ஏற்றம் கண்டுள்ளது.
எனினும் இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 7.9% வீழ்ச்சி தான் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் தேவையானது 9.94 மில்லியன் டன்கள் குறைந்திருந்தது. இது கடந்த 2007ம் ஆண்டில் இருந்து கடுமையான சரிவாகும். எனினும் தற்போது 64% மீண்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலையானது 83.63 ரூபாயாகவும், இதுவே டீசல் விலையானது 77.91 ரூபாயாகவும் உள்ளது. இன்றோடு கடந்த 12 நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.