இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தான ஜிடிபி தரவானது இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது சற்று மெதுவான வளர்ச்சியிலேயே இருந்து வருகின்றது.
தொடர்ந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் விலைவாசி, தேவை சரிவு, நுகர்வோர் செலவினங்கள் சரிவு, முதலீடுகள் சரிவு என -பல காரணிகளுக்கு மத்தியில் பொருளாதாரம் எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதோ ? என்பது பெரும் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது.
பணவீக்கம்
தொடர்ந்து பணவீக்க விகிதமானது ரிசர்வ் வங்கியின் இலக்கினையும் தாண்டியுள்ளது. இதன் காரணமாக திடீரென சில வாரங்களுக்கு முன்பு வட்டி விகிதத்தினை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இது பொருளாதார வளர்ச்சியில் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தின் மத்தியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தியது.
ஜிடிபி எதிர்பார்ப்பு
இந்தியாவின் ஜிடிபி விகிதமானது ஜனவரி - மார்ச் காலாண்டில் 4% வளர்ச்சி கண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வருடத்தில் மிக குறைந்த வளர்ச்சியினை எட்டியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதுவே கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ கணிப்பு
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கணிப்பின் படி, இந்தியாவின் வளர்ச்சி 4வது காலாண்டில் வெறும் 2.7% ஆக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. இதே ஆய்வு நிறுவனமான இக்ரா 3.5% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது.
2022ம் ஆண்டில் என்ன வளர்ச்சி?
இதற்கிடையில் மார்ச் 2022வுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.7% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளூம் பெர்க் தரவின் படி, மூன்று மாதங்களுக்கு முன்னதாக 8.9% ஆக புள்ளியியல் அமைச்சகத்தால் கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்?
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி மாதத்தில் ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமானது சற்று சரிவினைக் கண்டுள்ளது. ஓமிக்ரானை அடுத்து உக்ரைனில் போர் தொடங்கியது. இது இந்தியா மட்டும் அல்ல, சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
வளர்ச்சியை புறக்கணிக்க முடியாது?
இது சப்ளை சங்கிலியில் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பணவீக்கம் மோசமான நிலையை எட்டியுள்ளது. இதன் காரணமாக நுகர்வு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தேவையும் சரிவினைக் கண்டுள்ளது. எனினும் இந்த காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. பணவீக்கத்தினை பற்றிய கவலைகளுக்கு மத்தியில் வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும், வளர்ச்சியினையும் புறக்கணிக்க முடியாது என ஆளுநர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications