சர்வதேச அளவில் சமீபத்திய காலமாகவே கச்சா எண்ணெய் விலையானது, மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டு வருகின்றது. சொல்லப்போனால் கச்சா எண்ணெய் விலையானது இதுவரையில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியது.
எனினும் இதில் இந்தியாவுக்கு ஆறுதல் தரும் விஷயம் என்னவெனில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து சந்தை விலையை விட குறைவாக தள்ளுபடி விலையில் 34 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்-ஐ 3 மாதங்களில் இறக்குமதி செய்துள்ளது.
இதற்கிடையில் ஜூன் மாதத்திலும் 28 மில்லியன் பேரல்கள் எண்ணெய் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடப்பு மாதத்தில் எவ்வளவு?
இந்த மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா 24 மில்லியன் பேரல் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.2 மில்லியன் பேரல்களாகும். இதே மார்ச் மாதத்தில் 3 மில்லியன் பேரல்களாகும். அதனுடன் ஒப்பிடும்போது நடப்பு மாதத்தில் மிக அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பல அண்டை நாடுகளும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதியினை தடை செய்துள்ளன. இதற்கிடையில் ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரியளவில் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளும் தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது இன்று பேரலுக்கு 121 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது.
இந்தியா அதிகம் இறக்குமதி
நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியினை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆசியாவிலேயே மிக அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் பரிவர்த்தனையும் ரூபாய் - ரூபிளில் உள்ளதால் செலவினமும் குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இறக்குமதி பில் அதிகம்
அதிகரித்து வரும் இறக்குமதிகள், விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளினால், பிப்ரவரி 26 முதல் மே 26 வரையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவின் மொத்த பொருட்கள் இறக்குமதி 6.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.99 பில்லியன் டாலராக இருந்தது.
ஏற்றுமதி சரிவு ஏன்?
எனினும் ரஷ்யாவுக்கான இந்தியாவின் இறக்குமதிகள் இந்த காலகட்டத்தில் 50% சரிவினைக் கண்டு 377.07 மில்லியன் டாலர்களாக சரிவினைக் கண்டுள்ளது ஏனெனில் அரசு இன்னும் முறையான கட்டண முறையை அமைக்கவில்லை. மேற்கத்திய நாடுகள் படையெடுப்பிற்கு ரஷ்யாவுக்கு எதிர்ப்புக்கு தெரிவிக்கும் நிலையில், ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதாரம் தடைகளை விதித்துள்ளன. இதற்கிடையில் இந்தியாவின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.