இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் நடப்பு ஆண்டுகளில் புதிய வேலை வாய்ப்புகள் இருக்காது என்று சில அறிக்கைகள் கூறுகின்றன.
இதற்கிடையில் உலகம் முழுக்க மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது.
இப்படி இருக்கையில் சில நிறுவனங்கள் பணி நீக்கம், சம்பள குறைப்பு, ஊதிய உயர்வு, பணியமர்த்தல் குறைப்பு என பல அதரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பு
இந்தியாவில் ஐடி துறையில் சுமார் 45 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், கொரோனாவால் தேவை முடங்கியுள்ளதால் சுமார் 12 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கொரோனாவினால் தேவை குறையலாம் என்ற நிலையில், அடுத்து வரும் 6 மாதங்களில் பல ஆயிரம் பேர் பணியிழக்கலாம் என்றும் முன்னதாக ஒர் அறிக்கை கூறியது.
செலவு குறைப்பு
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது செலவினங்களை 4.5 சதவீதம் குறைந்து வளர்ச்சி விகிதம் 9.1 சதவீதம் இருக்கும் என்றும் Worldwide Blac Book Live Edition, March 2020இன் அறிக்கையில் இருப்பதாக சர்வதேச தரவுக் கழகம் தெரிவித்துள்ளது.
ஹார்டுவேர் பிரிவில் பாதிப்பு அதிகம்
அதிலும் இந்த சரிவின் பெரும்பகுதி ஹார்டுவேர் பிரிவில் இருக்கும் என்றும் இந்த ஆராய்ச்சி நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயால் செலவுகள் 4.1% குறையும் என்றும் ஐடிசி கூறியுள்ளது. எனினும் அத்துறையில் வளர்ச்சி விகிதம் 16.7% ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ச்சி இவ்வளவு தான்
தகவல் தொழில் நுட்ப சேவைகள் மற்றும் ஒப்பந்தங்களின் நிலையை நிலை நிறுத்துவதை நிறுவனங்கள் கவனிப்பதால், அதன் வளர்ச்சி பெரிய அளவில் மாற்றமில்லாமல் 6.9% ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 90% ஐடி ஊழியர்கள் 70-80% அவுட்சோசிங் பணிகளை வீட்டில் இருந்தே செய்ய ஏற்றுக் கொண்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
தேவை அதிகரிக்கும்
மேலும் இது லாக்டவுனுக்கு பிறகும் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை மாற்றப்படுவதற்கு சாத்திய மில்லை என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. எனினும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியவே நிறைய சாப்ட்வேர்கள் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அதன் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.