ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பங்களின் வருகையால் தகவல் தொழில்நுட்ப துறைக்கான வேலைவாய்ப்பு சந்தை பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. ஏஐ திறன்களை கொண்டிருக்கும் நபர்களால் தான் ஐடி துறை வேலைவாய்ப்பை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற சூழல் உண்டாகியுள்ளது. இதனால் தற்போது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் என்ன ஆகுமோ என குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் போன்றவை இந்த ஆண்டு Campus Hiring மூலம் கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பாரம்பரியமான முறையில் அதிக அளவில் ஆட்களை எடுப்பதற்கு பதிலாக, இப்போது அதிநவீன மற்றும் சிறப்பு வாய்ந்த பொறியியல் திறமைகளை (Frontier Engineering Talent) பணிக்கு அமர்த்தவே இந்நிறுவனங்கள் முன்னுரிமை தருவது தெரிய வருகிறது.

டிசிஎஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் Forward Deployed Engineers பிரிவில் 9000 பேரை வேலைக்கு அமர்த்த இருப்பதாக் அறிவித்துள்ளது, இன்போசிஸ் 6000 பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக கூறியுள்ளது. அதாவது இந்த பணியில் இருப்பவர்கள் வழக்கமான சாஃப்ட்வேர் இன்ஜினியர்களாக மட்டும் இல்லாமல், product thinking, customer consulting, மற்றும் AI expertise ஆகிய வேலைகளையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். தற்போது இந்திய ஐடி நிறுவனங்களில் இதற்கு தான் ஆட்கள் இல்லை.
எனவே தான் தற்போது கல்லூரி பயிலும் மாணவர்கள் வெறும் கோடிங் மட்டுமில்லாமல் அனைத்து திறன்களையும் வளர்ப்பது நல்லது. கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக ஐடி நிறுவனங்கள் வருவாய் குறைந்து, கல்லூரி மாணவர்களை ஃபிரஸ்ஸர்களாக வேலைக்கு அமர்த்துவதை குறைத்திருந்தன. சில நிறுவனங்கள் Campus Hiring-ஐ முற்றிலுமாக நிறுத்தியும் வைத்திருந்தன. ஆனால் தற்போது, எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு, மீண்டும் கல்லூரிகளிலிருந்து வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க ஐடி நிறுவனங்கள் தயாராகிவிட்டன என மணி கண்ட்ரோல் செய்தி கூறுகிறது.
வழக்கத்தை போல இல்லாமல் ஆட்கள் தேர்வில் இந்த முறை நிறுவனங்கள் கவனமாக இருக்கின்றன. ஐடி நிறுவனங்கள் இப்போது சாதாரண கோடிங் பணிகளுக்காக அல்லாமல், அதிநவீன தொழில்நுட்ப துறைகளில் திறன் பெற்ற பொறியியல் மாணவர்களை தேடுகின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங், கிளவுட் கம்ப்யூட்டிங் , சைபர் பாதுகாப்பு , டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற துறைகளில் ஆழ்ந்த அறிவுள்ள மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எனவே கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் இந்த பிரிவுகளில் திறமைகளை வளர்த்து கொண்டால் பெரிய ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு நிச்சயம். ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் எந்த பிராஜெக்டும் இல்லாமல் பெஞ்ச்சில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டன.
எனவே எதிர்காலத்தில் ப்ராஜெக்ட் வரலாம் என்ற அனுமானத்தில் மொத்தமாக ஆட்களை சேர்ப்பதை தவிர்த்து தேவையின் அடிப்படையில் மட்டுமே புதிய ஆட்களை வேலைக்கு எடுக்கின்றன. எனவே பட்டதாரிகள் வெறுமனே டிகிரி பெறுவதோடு நின்றுவிடாமல், ஏஐ போன்ற அதிநவீன தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொண்டால் மட்டுமே முன்னணி ஐடி நிறுவனங்களில் எளிதில் வேலை பெற முடியும் அதனை தக்க வைத்து கொள்ளவும் முடியும்.


Click it and Unblock the Notifications

