ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, விரைவில் 100 பில்லியன் டாலர் கிளப்பில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய பில்லியனரான முகேஷ் அம்பானி, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர்.
ப்ளூம்பெர்க் பில்லினர்கள் தரவின் படி, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு ஏற்றத்திற்கு பிறகு 92.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
முக்கிய காரணம்
சமீபத்திய காலமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில வர்த்தக அமர்வுகளில் ரிலையன்ஸ் பங்கின் விலை சுமார் 9% அதிகரித்துள்ளது. இதுவே முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இன்றைய பங்கு விலை நிலவரம்
இன்றும் கூட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, NSE-யில் 0.63% அதிகரித்து, 2,440.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 2458 ரூபாயாகும். குறைந்த பட்ச விலை 2,412 ரூபாயாகவும் உள்ளது.
இதே BSE-யில் 0.69% அதிகரித்து, 2,441.30 ரூபாயாகவும் அதிகரித்து காணப்படுகின்றது.
பெரிய பணக்காரர்
இந்த ஏற்றத்தின் காரணமாக 64 வயதான மிகப்பெரிய வணிக அதிபர், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தினையும் பெற்றுள்ளார். இதே சர்வதேச அளவில் தற்போது முகேஷ் அம்பானி 12வது இடத்தில் உள்ளார். இந்த வாரத்தில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 15.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் நிகர மதிப்பு
இதற்கிடையில் முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு விரைவில் 100 பில்லியன் டாலரினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்னும் நன்றாக அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்கு பின்னர், முகேஷ் அம்பானியின் சில்லறை வணிகம் மற்றும் எண்ணெய் வணிகமானது மீள்ச்சி காணத் தொடங்கியுள்ளது.
பங்கு விலை தொடர்ந்து அதிகரிப்பு
இந்த நிலையில் ரிலையன்ஸின் பங்கு விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 1ல் இருந்து இதன் பங்கு விலையானது 18% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பங்கின் விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் செப்டம்பர் 10 அன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலை போனை அறிமுகப்படுத்த உள்ளது.
சர்வதேச நிறுவனங்களுடனான கூட்டணி
இது சந்தையில் நல்ல வரவேற்பினை பெறலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. அதோடு பல சர்வதேச நிறுவனங்களுடனான கூட்டணி என்பது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இன்னும் கூடுதலாக சாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக சவுதி அராம்கோவுடனான ரிலையன்ஸின் கூட்டணி என்பது மாபெரும் கூட்டணியாக பார்க்கப்படுகிறது. இது எண்ணெய் வணிகத்தில் ஏற்கனவே கோலேச்சி வரும் அம்பானிக்கு இன்னும் சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
ஆச்சரியம் ஏதுமில்லை
அதோடு தனது வணிகத்தினை இன்னும் விரிவாக்கம் செய்யும் பொருட்டு, தொடர்ந்து பல நிறுவனங்களை கையகப்படுத்தியும், பங்குகளை வாங்கியும் வருகின்றது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். சில தினங்களுக்கு முன்பு கூட தனது ஆடை வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டினை சேர்ந்த நல்லி மற்றும் போத்தீஸ் நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. இப்படி தொடர்ந்து போட்டி நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்து வரும் முகேஷ் அம்பானியின், சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.