இந்தியாவில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தி வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் நாட்டின் உற்பத்தி அளவீடு அதிகரித்து, எப்போது இல்லாத வகையில் அக்டோபர் மாத IHS மார்கிட் இந்தியா-வின் உற்பத்தி பிஎம்ஐ குறியீடு 13 வருடத்தில் சிறப்பான வளர்ச்சியை அக்டோபர் மாதம் பதிவு செய்துள்ளது.
பண்டிகை கால வர்த்தகத்திற்காக உற்பத்தி நிறுவனங்கள் முன்கூடியே அதிகளவில் உற்பத்தி செய்து வரும் காரணத்தினாலும், பல மாத லாக்டவுனுக்குப் பின் சந்தை வர்த்தகத்திற்குத் திறக்கப்பட்டு விற்பனை அதிகரித்துக் காணப்படுகிறது.
இதன் எதிரொலியாகவே அக்டோபர் மாதத்தில் நாட்டின் உற்பத்தி அளவீடு 13 வருடத்தில் இல்லாத அளவிற்குச் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.
13 வருட வளர்ச்சி
IHS மார்கிட் இந்தியா வெளியிட்டுள்ள பிஎம்ஐ குறியீட்டில் இந்தியாவின் உற்பத்தி அளவு செப்டம்பர் மாதத்தில் 56.8 புள்ளிகளாக இருந்தது. பண்டிகை கால விற்பனைக்கு மக்கள் மத்தியில் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் உற்பத்தி அளவீடுகள் அதிகரித்து அக்டோபர் மாதம் 58.9 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது.
இது கடந்த 13 வருடத்தில் ஏற்படாத மாதாந்திர வளர்ச்சி என IHS மார்கிட் இந்தியா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பொதுவாகப் பிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் உற்பத்தித் துறை வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகப் பொருள்.
400 உற்பத்தியாளர்கள்
IHS மார்கிட் இந்தியா இந்தப் பிஎம்ஐ குறியீட்டை இந்தியாவில் 400 முன்னணி உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி அளவீட்டை மையமாக வைத்துத் தொகுத்து வெளியிடுகிறது. இந்த அதிகப்படியான மாதாந்திர வளர்ச்சி நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறை வளர்ச்சிப் பாதையில் வேகமாகச் செல்வதைக் காட்டுகிறது.
ஆனால் பண்டிகை காலம் முடிந்த பின் இந்த அளவீடு கணிசமாகச் சரியவும் வாய்ப்பு உள்ளது.
நுகர்வோர்
அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் மற்றும் முதலீட்டுப் பொருட்களின், உற்பத்தியும் விற்பனையும் அதிகமாக இருந்தது என IHS மார்கிட் இந்தியா தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. பொதுவாகப் பிஎம்ஐ குறியீட்டில் டாப் பிரிவு சரக்குகளின் உற்பத்தி தான் முக்கிய இடத்தைப் பெறும், ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடுத்தரப் பிரிவு பொருட்களின் உற்பத்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
ஈவே பில்
மேலும் சரக்கு போக்குவரத்துக்காகப் போடப்படும் ஈவே பில் எண்ணிக்கை கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 21 சதவீதம் அதிகமாக உள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகமாக உள்ளது.
இதனால் நாடு முழுவதும் உற்பத்தி பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் நவம்பர் மாதத்தில் வர்த்தகச் சந்தை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.