டெல்லி : இந்தியாவில் உற்பத்தி துறை சார்ந்த பிஎம்ஐ குறியீடு ((Purchasing Managers' Index) கடந்த மார்ச் மாதத்தில், நான்கு மாதத்தில் இல்லாத அளவுக்கு 51.8 ஆக குறைந்துள்ளது.
தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் 21 நாள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் முடங்கியுள்ள நிலையில், இது பொருளாதாரத்திலும் முடக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
நிக்கி மார்கிட் இந்தியா அமைப்பு வெளியிட்ட உற்பத்தி குறித்தான பிஎம்ஐ குறியீடு, கடந்த மார்ச் மாதத்தில் நான்கு மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 54.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தரவு பகுப்பாய்வு நிறுவனமான IHS Markit கணக்கெடுப்பின் படி, புதிய ஆர்டர்கள், வெளியீடு, வேலைகள், சப்ளையர்கள், டெலிவரி செய்த நேரம் மற்றும் சுமார் 400 உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட பங்குகள் ஆகியவற்றை கண்கானித்து இந்த தரவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா உற்பத்தியாளர்கள் தற்போது சில சிக்கல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஏற்றுமதி ஆர்டர்கள் மற்றும் எதிர்கால செயல்பாட்டு குறியீடுகள் என அனைத்தும் குறைந்து காணப்படுகின்றன. இது உலகளவில் தேவை குறைந்துள்ளதையும் காட்டுகிறது. ஆக இது உள்நாட்டு பொருளாதாரம் குறைவதையே காட்டுகிறது.
மேலும் தேவை குறைந்துள்ள நிலையில், இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதையும் காட்டுகிறது. அதோடு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் என நிறுவனங்கள் தங்களது திறனை குறைப்பதில் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. மேலும் தற்போது நிலவி வரும் அசாதாரணமான நிலையில் புதிய வணிகம் என்பது தற்போதைக்கு சாத்தியமான விஷயம் என்பது தெரியவில்லை..
மேலும் தற்போது ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிலவி வரும் நெருக்கடி நிலையில், வாடிக்கையாளார்களுக்கு விற்பனை செய்வது சாத்தியமான விஷயமும் அல்ல. இதோடு குறைவான தேவை, வினியோக சங்கிலி பாதிப்பு என பலவும் இந்த நிலையை இன்னும் மோசமாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் கொரோனாவின் தாக்கம் இதோடு குறைந்துவிட போவதில்லை. இன்னும் அதிகரிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் வரும் மாதங்களிலும் உற்பத்தி குறையலாம். தேவை மற்றும் நுகர்வு குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அடுத்து வரும் மாதங்களிலும் இந்த விகிதம் இன்னும் வீழ்ச்சி காணக்கூடும்.