உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அமெரிக்கா, சீனா, பிரிட்டன், இந்தியா உட்பட அனைத்து முன்னணி பொருளாதார நாடாகும் நெட் ஜீரோ அளவீட்டை அடையப் போராடி வருகிறது.
அப்படி இந்தியா மட்டும் நெட் ஜீரோ அளவீட்டை அடைந்தால் பல நன்மைகள் உருவாகும் என உலகப் பொருளாதார அமைப்பு (WEF) அறிவித்துள்ளது.
நெட் ஜீரோ என்றால் என்ன..?
ஒரு நாடு உற்பத்தி செய்யப்படும் கிரீன்ஹவுஸ் வாயு அளவிற்கும், வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்பட்ட கிரீன்ஹவுஸ் வாயு அளவிற்கும் இடையேயான சமநிலை தான் இந்த நெட் ஜீரோ. இதைச் செயல்படுத்த முதலில் கிரீன்ஹவுஸ் வாயு உற்பத்தியைப் பெரிய அளவில் குறைக்க வேண்டும் என்பதே தற்போது உலக நாடுகளின் முக்கிய இலக்காக உள்ளது.
நெட் ஜீரோ இலக்கு
இந்தியா நெட் ஜீரோ இலக்கை அடைய எடுக்கும் முயற்சிகள் மூலம் மட்டுமே 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள், 2070க்குள் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனக் கணித்துள்ளது உலகப் பொருளாதார அமைப்பு (WEF).
பருவநிலை மாற்றம்
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள காரணத்தால், அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த முயற்சியில் சர்வதேச பொருளாதாரமும் சுத்திகரிக்கப்படும் என உலகப் பொருளாதார அமைப்பு (WEF) தெரிவித்துள்ளது.
சுற்றுசூழல்
மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியா கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் பல வழிகளில் கிரீன்ஹவுஸ் வாயு அதிகளவில் வெளியேற்றப்படுகிறது.
Decarbonisation பயணம்
2070ஆம் ஆண்டு வரையிலான இந்தியாவின் Decarbonisation பயணத்தின் மூலம் சுமார் 15 டிரில்லியன் டாலர் அளவிலான பொருளாதாரத் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளே நெட் ஜீரோ அளவீட்டை அடையப் போராடி வரும் நிலையில் இந்தியாவால் இது சாத்தியமா..?