இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது கடந்த 2022ம் நிதியாண்டில் கிட்டதட்ட இருமடங்கு அதிகரித்து, 119 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இது ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலையானது கடுமையான விலையேற்றம் கண்ட நிலையில் இந்தளவுக்கு அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரியளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் ஒரு நாடாகும்.
இறக்குமதி மதிப்பு
கடந்த ஏப்ரல் 2021ல் இருந்து மார்ச் 2022ல் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா 119.2 பில்லியன் மதிப்பிலான எண்ணெய் இறக்குமதியினை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 62.2 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுக் குழுவின் தரவுகள் கூறுகின்றன.
மார்ச் மாதத்தில் இறக்குமதி
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியா தனியாக 13.7 பில்லியன் டாலர் மதிப்பிலான் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது எண்ணெய் விலையானது 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட நிலையில், இந்த அளவுக்கு செலவு விகிதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 8.4 பில்லியன் டாலர் மட்டுமே இந்த காலகட்டத்தில் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று உச்சம் தொட்ட எண்ணெய் விலை
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே விலை அதிகரிக்க தொடங்கிய நிலையில், ஜனவரி மாதத்தில் விலையானது பேரலுக்கு 100 டாலர்களை தாண்டியது. இது மார்ச் மாத தொடக்கத்தில் கிட்டதட்ட 140 டாலர்களையும் தொட்டது. தற்போது வரையிலும் கூட விலையானது 100 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது.
எவ்வளவு எண்ணெய் இறக்குமதி
கடந்த 2021 - 2022ம் நிதியாண்டில் இந்தியா PPAC அறிக்கையின் படி, 212.4 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 196.5 மில்லியன் டன்னாக இருந்தது. இது கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட குறைவாக இருந்தாலும், விலை அதிகரிப்பு செலவினங்களை கூடுதலாக்கியுள்ளது. கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் 227 மில்லியன் டன் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 2019 - 20ல் 101.4 பில்லியன் டாலரினை அரசு இறக்குமதிக்காக செலவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகளவில் இறக்குமதி
இந்தியா தனது மொத்த தேவையில் 85.5% இறக்குமதியின் மூலமே பூர்த்தி செய்து கொண்டு வருகின்றது. 2021 - 22ல் பெட்ரோலியம் பொருட்கள் நுகர்வு மட்டும் 202.7 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 194.3 மில்லியன் டன்னாக இருந்தது. எப்படியிருப்பினும் கொரோனாவுக்கு முன்பு 2019 - 20ல் இந்த விகிதம் 214.0 மில்லியன் டன்னாக இருந்தது.