பொதுவாக சீனாவில் இருந்து தான் இந்தியாவுக்கு பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படும், ஆனால் கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் பல துறையில் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்பால் இந்தியா தற்போது சீனாவுக்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளது. இதில் முக்கியமான ஒரு பொருள் தான் பிசிபி (PCB), இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் சீனாவுக்கான பிசிபி ஏற்றுமதியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிப்பது தான்.
இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பிசிபி மதிப்பு 2026ஆம் நிதியாண்டில் மட்டும் 42 மடங்கு அதிகரித்து 1.5 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் இதன் அளவு வெறும் 36 மில்லியன் டாலராக இருந்த நிலையில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 42 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியாவின் மொத்த பிசிபி ஏற்றுமதி மதிப்பான 1.9 பில்லியன் டாலரில் கிட்டத்தட்ட 80 சதவீதம் சீனாவுக்கு சென்றுள்ளது. இது வழக்கத்திற்கு மாறான ஒரு வளர்ச்சி மட்டும் அல்லாமல் இந்தியா இத்துறையில் எந்த அளவுக்கு வேகமாக உயர்ந்து வருகிறது என்பதையும் காட்டுகிறது.
இதேவேளையில் இந்தியா - சீனா மத்தியிலான வர்த்தகத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் முக்கிய பங்கீடு வகிக்கிறது, 2026ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 46.4 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இந்தியா சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிசிபி உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், சீனாவுக்கான ஏற்றுமதியிலும் தமிழ்நாடு பெரும் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் பிசிபி போர்ட் உற்பத்தியில் பெரிய நிறுவனங்களை தாண்டி சிறிய நிறுவனங்களும் அதிகளவில் உள்ளது. குறிப்பாக ஓசூர், சென்னை பகுதியில் MSME நிறுவனங்களாக இத்துறையில் பெரும் சக்தியாக உருவெடுத்து நிற்கிறது.
எந்தொரு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களாக இருந்தாலும் பிசிபி என்பது நரம்பு மண்டலம் போன்று, இது சரியாக வேலை செய்தால் மட்டுமே மொத்த சிஸ்டமும் வேலை செய்யும் இல்லையெனில் இந்த கருவி குப்பையில் தான் போட வேண்டும். இதேவேளையில் ஒரு எலக்ட்ரானிக்ஸ் குருவியில் பிசிபி-யின் மதிப்பீட்டின் பங்கும் மிகவும் சிறியது.
ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் முதல் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களிலும் இருக்கும் இந்த பிசிபி தயாரிப்பில் சீனாவை காட்டிலும் ஒரு படிக்கு மேல் தமிழ்நாடு இருக்கும் காரணத்தாலேயே (விலையிலும்) சீனா இந்தியாவில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் வாங்குகிறது. இதேபோல் 40 மடங்கு உயர்வு என்பது மிகப்பெரிய வளர்ச்சி, இந்த வளர்ச்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டில் அதிகம் வேலைவாய்ப்பு உருவாகும் துறையாக இது இருக்கும்.


Click it and Unblock the Notifications
