டெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு கூகுள் மற்றும் ஆல்பாஃபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசிய நிலையில், சுந்தர் பிச்சை இந்திய திறமையின் அடையாளம் என பெருமிதப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் உலகளாவிய டிஜிட்டல் கல்வியை முன்னிலைப்படுத்த பணியாற்றுமாறு, சுந்தர் பிச்சையிடம் திரவுபதி முர்மு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா என்னில் ஒரு பகுதி
தமிழகத்தில் பிறந்து இன்று உலகினையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ள சுந்தர் பிச்சை, நிச்சயம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் எனலாம். சமீபத்தில் கூட பத்ம பூஷன் விருது பெற்ற போது இந்தியா என்னில் ஒரு பகுதி.. நான் எங்கு சென்றாலும் அதனை என்னுடன் எடுத்து செல்வேன் என்றும் இந்தியாவை பெருமிதப்படுத்தினார்.
ஒழுங்குமுறை நடவடிக்கை தேவை
ஜனாதிபதியை தொடர்ந்து சுந்தர் பிச்சை பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தார்.
இதற்கிடையில் இந்தியாவில் டெக்னாலஜி துறையில் சில ஒழுங்குமுறை நடவடிக்கை தேவை. இதன் மூலம் டெக் துறையில் இந்தியா தலைமை வகிக்க முடியும். இது மிக அவசியமான ஒன்று. இது மக்களை எப்படி பாதுகாப்பது என்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அது ஒவ்வொருவரின் தனியுரிமை. பாதுகாப்பு என கூறியுள்ளார்.
ஸ்டார்ட் அப்கள்
ஸ்டார்ட் அப்கள் குறித்து பேசிய சுந்தர் பிச்சை, ஸ்டார்ட் அப்களுக்கு இதனை விட சரியான நேரம் இல்லை. பெரிய பொருளாதார நாடுகள் திடீரென வளர்ச்சி மேம்படத்த் தொடங்கலாம். பெரும் டெக் நிறுவனங்கள் தற்போது சரிவினைக் கண்டு வருகின்றன. ஆனால் கூகுள் போன்ற நிறுவனங்கள் வீழ்ச்சியின் போது உருவாக்கப்பட்டவை.
பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட் அப்கள்
உலகளவில் இந்தியா மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுசூழலை கொண்டுள்ளது. இந்தியா 61,000 ஸ்டார்ட் அப்களுக்கு மேலாக கொண்டுள்ளது. 107 யூனிகார்ன்களை கொண்டுள்ளது. இது ஒவ்வொன்றும் 1 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது. கூகுள் நிறுவனம் பெண்களை தலைமையாக கொண்ட ஸ்டார்ட் அப்களில் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.