மத்திய அரசு நேற்று நாட்டின் ஜிடிபி அளவீடுகளை வெளியிட்டது. இந்த ஜிடிபி வளர்ச்சி அளவீடுகள் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும் 2019-20ஆம் நிதியாண்டின் அளவீட்டை அடையவில்லை எனத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது மட்டும் அல்லாமல் இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் எந்த அளவிற்குக் குறைவாக உள்ளது என்பதையும் உதாரணத்தோடு விளக்கியுள்ளார்.
இந்திய பொருளாதாரம் வளர்ச்சி
இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அனைவரும் எதிர்பார்த்தபடியே 20.1 சதவீதம் என்ற வரலாற்று உயர்வைப் பதிவு செய்துள்ளது. இந்த உயர்வு லோ பேஸ் எபக்ட் வாயிலாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஊக்குவிப்புத் திட்டங்கள்
ஆனால் மத்திய அரசு 2 முறை நாட்டின் வளர்ச்சிக்காக ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தும் 2019-20ஆம் ஆண்டின் ஜூன் காலாண்டு அளவீட்டை இன்னமும் அடையவில்லை என்பது தான் தற்போது வருத்தமான செய்தியாக உள்ளது எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் நேற்றே வெளியிட்டு இருந்தது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
இந்நிலையில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டரில் ஜூன் காலாண்டின் இந்தியப் பொருளாதார வளர்ச்சி தரவுகளை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று இல்லாத காலகட்டமான 2019-20 முதல் காலாண்டில் அதாவது இதே ஏப்ரல் - ஜூன் காலாண்டின் இந்திய பொருளாதார அளவீட்டை100 எனப் பேஸ்லைன் ஆக வைத்துக்கொள்வோம் எனப் பிடிஆர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் -24.4 சதவீதம் சரிவு
2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் கொரோனா தொற்று மற்றும் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத விதமாக -24.4 சதவீதம் சரிந்ததை யாராலும் மறக்க முடியாது.
பிடிஆர் கொடுத்த விளக்கம்
2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -24.4 சதவீதம் குறைந்த காரணத்தால் 75.6 ஆக நாட்டின் பொருளாதாரம் இருந்தது. 2021-22நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 20.1 சதவீதம் உயர்ந்துள்ளதால் நாட்டின் பொருளாதாரம் 75.6ல் 20.1 சதவீத உயர்வின் மூலம் 90.8 சதவீதம் வரையில் உயர்ந்து 90.8 ஆக உயர்ந்துள்ளது எனப் பிடிஆர் தெரிவித்துள்ளார்.
9.2 சதவீதம் குறைவாகவே உள்ளது
ஆக 2019-20 ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் 2021-22 ஜூன் காலாண்டில் 9.2 சதவீதம் குறைவாகவே உள்ளது என உதாரணத்தோடு விளக்கம் கொடுத்துள்ளார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதைத் தான் "Low Base" effect எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
கவுசிக் பாசு ட்வீட்
இந்தத் தகவலை கார்ன்வெல் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் கவுசிக் பாசு தனது டிவிட்டரில் பதிவு செய்திருந்தார், இதைச் சாமானிய மக்களுக்குப் புரியும் வண்ணம் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டர் பதிவின் மூலம் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்தியாவின் GVA அளவீடு
GVA அளவு கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 25.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்து, தற்போது 30.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் 2019-20 நிதியாண்டில் ஜூன் காலாண்டில் 33.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என அரசு வெளியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பிரிட்டன் பொருளாதாரம்
இதே காலக்கட்டத்தில் பிரிட்டன் பொருளாதாரம் 22.2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது, ஆனால் முந்தைய காலாண்டை ஒப்பிடுகையில் பிரிட்டன் பொருளாதாரம் வெறும் 4.8 சதவீத வளர்ச்சியை தான் பதிவு செய்துள்ளது. இந்த வகையில் பிரிட்டனை விட இந்தியா வளர்ச்சி அளவீட்டில் பின்தங்கி தான் உள்ளது.
8 முக்கிய துறைகள்
நாட்டின் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி அளவீடு.
விவசாயம், மீன்பிடி துறை : 4.5 சதவீதம் வளர்ச்சி
சுரங்கம், குவாரி : 18.6 சதவீதம் வளர்ச்சி
உற்பத்தி துறை : 49.6 சதவீதம் வளர்ச்சி
மின்சாரம், கேஸ், தண்ணீர் விநியோகம் : 14.3 சதவீதம் வளர்ச்சி
கட்டுமான துறை : 68.3 சதவீதம் வளர்ச்சி
வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, கம்யூனிகேஷன், சேவை துறை : 34.3 சதவீதம் வளர்ச்சி
நிதியியல், ரியல் எஸ்டேட் : 3.7 சதவீதம் வளர்ச்சி
பொது நிர்வாரம், பாதுகாப்பு மற்றும் இதர துறை : 5.8 சதவீதம் வளர்ச்சி
ஜிடிபி தரவுகள்
ஜிடிபி தரவுகள் பொருளாதார வல்லுனர்களுக்குப் பெரிய அளவில் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
பங்குச்சந்தை வர்த்தகம்
இன்று அமெரிக்கா மற்றும் ஆசியச் சந்தைகளை மந்தமான வர்த்தகச் சூழ்நிலையைப் பதிவு செய்து வந்தது. ஆனாலும் மத்திய அரசு நேற்று வெளியிட்டு உள்ள ஜூன் காலாண்டின் ஜிடிபி தரவுகள் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டுச் சந்தை முதலீட்டாளர்கள் வரையில் ஈர்த்துள்ளது.
முதல் முறையாக 20.1% வளர்ச்சி
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக 20.1 சதவீதம் என்ற மிகப்பெரிய காலாண்டு வளர்ச்சியை இந்தியப் பொருளாதாரம் பதிவு செய்துள்ளது இதுதான் முதல் முறை என்பதால் கூடுதலான தாக்கத்தை முதலீட்டுச் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நிலவரம்
நேற்றைய வர்த்தகமும் ஜிடிபி தரவுகள் மூலம் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்த நிலையில், இன்றும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகளுக்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்து 57,918.71 புள்ளிகளையும், நிஃப்டி அதிகப்படியாக 17,225.75 புள்ளிகளையும் அடைந்துள்ளது.