சர்வதேச அளவில் உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், பணவீக்கம் என்பது மிகப்பெரியளவிலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இது இந்தியாவினையும் விட்டு வைக்கவில்லை எனலாம். கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்க குறியீடானது, 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 4வது மாதமாக ரிசர்வ் வங்கியின் இலக்கினையும் தாண்டி பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பணவீக்க இலக்கு
இது தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் உணவு பொருள் விலையால், இந்தளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியில் பணவீக்க இலக்கு என்பது 4 சதவீதம் ஆகும். இது இந்த இலக்கு விலைக்கு மேலாக 2%மும் அல்லது இலக்கு விலைக்கு கீழாக அதிகபட்சம் 2 சதவீதம் வரையிலும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய மாதங்களில் என்ன விகிதம்?
கடந்த மார்ச் மாதத்தில் இந்த நுகர்வோர் விலை குறியீடானது 6.95 சதவீதமாக இருந்தது. இதே பிப்ரவரியில் 6.07 சதவீதமாகவும் இருந்தது. ஜனவரி மாதத்தில் 6. 1 சதவீதமாகவும் இருந்தது. இந்த நிலையில் தான் ஏப்ரல் மாதத்தில் 18 மாதத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு ஏப்ரல் 2021ல் 4.23 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவு பணவீக்கம்
இந்த பணவீக்க பட்டியலில் உணவு பணவீக்கமாகது 8.38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 7.68 சதவீதமாக இருந்தது. இதே கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 1.96 சதவீதமாகவும் இருந்தது.
இந்தியா மிகப்பெரிய அளவிலான எண்ணெய் இறக்குமதியாளராக இருக்கும் நிலையில், சர்வதேச சந்தையின் எதிரொலி இந்தியாவின் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாயும் சரிவு
இவ்வாறு அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் ரூபாயின் மதிப்பானது 4% சரிவினைக் கண்டுள்ளது. இன்றும் கூட ரூபாயின் மதிப்பானது புதிய வரலாற்று சரிவினைக் கண்டுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தினை உயர்த்த வழிவகுக்கலாம். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கியானது திடீரென 40 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியது.
பணவீக்கம் குறையலாம்?
இந்த வட்டி அதிகரிப்பானது 2018க்கு பிறகு 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 4.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே அமெரிக்காவிப்ன் ஃபெடரல் வங்கியானது 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது வரவிருக்கும் கூட்டத்திலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரியினையும் குறைக்கணும்
எனினும் நிபுணர்கள் வட்டி குறைப்பு என்பது மட்டுமே பணவீக்கத்தினை உடனடியாக குறைக்க போதாது. அரசு வரி விகிதத்தினையும் குறைக்க வேண்டும். இது பொருட்களின் விலை குறைய வழிவகுக்கும். இதன் காரணமாக பணவீக்கம் என்பது குறையலாம். மக்களும் விலைவாசி சரிவால் சற்றே ஆறுதடையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications