இந்திய வர்த்தகத் துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் சேவைத் துறையின் வர்த்தகம் ஜூன் மாதத்தில் அதிகளவில் பாதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து படிப்படியாகக் குறைந்து வந்தாலும், வேக்சின் பற்றாக்குறை காரணமாக மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் முழுமையாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதனால் சேவைத்துறையின் வர்த்தகம் அதிகளவில் இந்த ஜூன் மாதம் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சேவைத்துறையில் வேலை இழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகிறது.
3வது பெரிய பொருளாதார நாடு
ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் இதுவரை, கொரோனா தொற்று மூலம் சுமார் 4,00,000 பேர் மரணம் அடைந்துள்ளனர், 3.5 கோடி பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபோக தினமும் 40,000 பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவிட் வேக்சின்
இந்த நிலையிலும் இந்தியாவில் போதுமான கோவிட் வேக்சின் உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால், அதிக மக்கள் கூட்டம் இருக்கும் பகுதியில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்படும் நிலை இருக்கத்தான் செய்கிறது. இதற்கிடையில் டெல்டா வைரஸ், 3வது அலை எனப் பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
சர்வீசஸ் பிஎம்ஐ அளவீடு
இந்நிலையில் IHS மார்டகிட்ஸ் சர்வீசஸ் பிஎம்ஐ அளவீடு தற்போது வெளியாகியுள்ளது, மே மாதம் 46.4 புள்ளிகளாக இருந்த சேவைத்துறையின் பிஎம்ஐ அளவீடு ஜூன் மாதம் 41.2 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. பொதுவாகப் பிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்குக் குறைவாக இருந்தால் சரிவு பாதையில் இருப்பதாக பொருள்.
IHS மார்டகிட்ஸ் அமைப்பு
இந்தியாவின் தற்போதைய கொரோனா நிலையும், சர்வீசஸ் பிஎம்ஐ அளவீட்டையும் பார்க்கும்போது நாட்டின் சேவைத்துறை மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது என IHS மார்டகிட்ஸ் அமைப்பின் பொருளாதார இணைத் தலைவர் போலியானா டி லிமா தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புப் பாதிப்பு
பிஎம்ஐ அளவீடு ஜூன் மாதம் 41.2 புள்ளிகளாகக் குறைந்துள்ளது மூலம் சேவைத்துறையில் புதிய வர்த்தகம், அவுட்புட் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தும் பாதிக்கப்பட உள்ளது. முதல் கொரோனா தொற்றுக் காலகட்டத்தை ஒப்பிடுகையில் 2வது கொரோனா அலையில் குறைவாகவே பாதிக்கப்பட்டு உள்ளது.