இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் லாக்டவுன் அறிவிப்பு மூலம் ஏற்பட்ட வர்த்தகச் சரிவு வேலைவாய்ப்பு சந்தையைக் கடுமையாகப் பாதித்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் பிரிட்டன் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ள புதிய வகையான கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வேலைவாய்ப்பு சந்தையைப் பாதிக்க உள்ளது என ஆய்வுகள் கூறுகிறது.
இந்தப் பாதிப்பால் மீண்டும் இந்தியாவில் ஊழியர்கள் பணிநீக்கம் பெரிய அளவில் நடக்கும் என ஆய்வுகள் கூறுகிறது.
புதிய கொரோனா வைரஸ்
இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையைத் தொடர்ந்து வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும் சேவை துறை லாக்டவுன் சரிவில் இருந்து மீண்டு வந்துள்ள அதேவேளையில் டிசம்பர் மாதம் இதன் வளர்ச்சி குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ்.
வேலைவாய்ப்பு சந்தை
ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை ரெசிஷனில் இருந்து வேகமாக மீண்டும் வரும் வேளையில், புதிய கொரோனா வைரஸ் தொற்று சேவை துறையின் வளர்ச்சி மற்றும் இத்துறையில் உருவாகும் வேலைவாய்ப்புகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
சேவை துறை வளர்ச்சி
நிக்கி / ஐஹெச்எஸ் மார்கிட் சரிவீஸ் பிஎம்ஐ குறியீடு நவம்பர் மாதத்தில் 53.7 புள்ளிகளாக இருந்த நிலையில் டிசம்பர் மாதம் இதன் அளவீடு 52.3 புள்ளிகளாகச் சரிந்துள்ளது. கடந்த 3 மாதங்களாகத் தொடர்ந்து 50 புள்ளிகளைக் கடந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கும் சேவைத் துறை டிசம்பர் மாதத்தில் சரிய துவங்கியுள்ளது. இது சேவைத்துறைக்கு ஒரு அபாய மணியாகவே விளங்குகிறது.
புதிய வேலைவாய்ப்புகள்
புதன்கிழமை வரையில் இந்தியாவில் புதிய வகைக் கொரோனா தொற்று எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் உலகில் பல பகுதிகளில் பரவி வரும் புதிய வகைக் கொரோனா தொற்று நிறுவனங்கள் மத்தியில் புதிய ஊழியர்களை நியமிக்கும் எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதனால் சேவைத்துறையின் வர்த்தக வளர்ச்சி மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது என IHS Markit பொருளாதாரத் துணைத் தலைவர் போலியான டி லிமா தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து
இதன் மூலம் 2021ஆம் ஆண்டின் முதல் பாதி மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து இன்னும் வராத நிலையில் புதிய வகைக் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கும்.
மீண்டும் லாக்டவுன்
ஏற்கனவே இந்தியாவில் பல இடங்களில் இரவு நேரத்தில் லாக்டவுன் கடைப்பிடிக்கும் வேளையில், புதிய வகைக் கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன் அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் தேவையும், உற்பத்தியும் பெரிய அளவில் குறையும். இதன் எதிரொலி கண்டிப்பாக வேலைவாய்ப்பு சந்தையைப் பாதிக்கும்.
இதனால் மீண்டும் இந்தியாவில் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யத் துவங்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.