இந்தியாவில் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது களை கட்டியுள்ளது. இது கொரோனாவுக்கும் மத்தியிலும் விற்பனை அதிகரித்துள்ளது கவனிக்கதக்க விஷயம்.
எனினும் தற்போது கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தேவை மீண்டும் பாதிக்கப்பட தொடங்கியுள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
இது அடுத்த சில காலாண்டுகளிலும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையிலும் வழக்கம்போல மார்ச் 2021 காலாண்டிலும் சீனா ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 75% பங்கினை கொண்டுள்ளன.
எகிறிய விற்பனை
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கொரோனா காலத்திற்கு பிறகு கடந்த காலாண்டில் தான் ஸ்மார்ட்போன் தேவையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது கடந்த ஆண்டை காட்டிலும் 23% அதிகரித்து 38 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது மிக சிறந்த விற்பனை என ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் தெரிவித்துள்ளது.
தேவை அதிகரிப்பு
இது புதிய போன்களின் வரத்து மற்றும் சலுகைகள் மற்றும் நிதி சலுகைகள் என பலவும் தேவைக்கு வழிவகுத்தன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையானது காலாண்டர் ஆண்டில் முதல் காலாண்டுடன் சேர்ந்து தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளாக அதிகளவிலான விற்பனையை கண்டு வருகின்றது. இது தேவை உயர்ந்துள்ளதையே காட்டுகின்றது. தடுப்பூசி போட தொடங்கப்பட்டுள்ள நிலையில், நுகர்வோர் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
டாப் லிஸ்டில் யாரு?
கடந்த மார்ச் காலாண்டில் வழக்கம்போல் சீனாவின் ஜியோமி நிறுவனமே முதலிடத்தில் காணப்படுகிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் விற்பனை குறைந்து காணப்பட்டாலும், முதலிடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் 31% பங்கினை வகித்த ஜியோமி, மார்ச் 2021 காலாண்டில் 26% ஆக குறைந்துள்ளது. எனினும் சந்தையில் முதலிடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் சாம்சங்
இரண்டாவது இடத்தில் சாம்சங் நிறுவனம் 20% சந்தை பங்கும், விவோ மூன்றாவது இடத்திலும், ரியல்மி 4வது இடத்திலும், ஓப்போ 5வது இடத்திலும், மற்ற நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டில் 16% சந்தை பங்கினை கொண்டு இருந்து நிலையில், மார்ச் 2021 காலாண்டில் 20% ஆக அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது.