இந்தியாவின் வளர்ச்சிக்கு எப்படி ஐடி துறை முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதேபோல தான் தமிழ்நாட்டின் பொருளாதாரம், லேலைவாய்ப்பில் ஐடி சேவை மிகவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
மேலும் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 2030 ஆம் ஆண்டுகள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த உயரத்தை எட்ட தமிழ்நாட்டுக்கு ஐடி சேவை துறை எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல தேவையில்லை, இந்த நிலையில் எப்போதும் ஐடி சேவை ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நிலையில் தமிழ்நாடு மாநிலம் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்தியா ஐடி சேவை
இந்திய ஐடி சேவை துறையின் ஏற்றுமதி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி அமைச்சகத்தின் மாநில அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரன் பதில் அளித்துள்ளார். நாஸ்காம் அமைப்பின் தரவுகள் அடிப்படையில் கடந்த 3 ஆண்டில் இந்திய IT/BPM சேவை துறையின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாஸ்காம்
நாஸ்காம் தரவுகள் படி 2019-20 ல் இந்தியாவின் IT/BPM சேவை துறையின் ஏற்றுமதி மதிப்பு 149 பில்லியன் டாலர், 2021-22 ஆம் நிதியாண்டில் 152 பில்லியன் டாலர், 2021-2022 ஆம் நிதியாண்டில் 178 பில்லியன் டாலர் வரையில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு
இந்த நிலையில் 2021-22 ஆம் நிதியாண்டின் கணிக்கப்பட்ட அளவின் அடிப்படையில் அதிகப்படியான சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு 2 வது இடத்தில் இருந்து தற்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
டாப் 5 மாநிலங்கள்
இதன் மூலம் டாப் 5 இடங்களில் 3.95 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐடி சேவை ஏற்றுமதி உடன் கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் மகாராஷ்டிரா 2.36 லட்சம் கோடி ரூபாய் உடன் உள்ளது, தெலுங்கானா - 1.8 லட்சம் கோடி ரூபாய், தமிழ்நாடு - 1.58 லட்சம் கோடி ரூபாய், உத்தர பிரதேசம் 55,000 கோடி ரூபாய் என டாப் 5 இடத்தில் உள்ளது.
வளர்ச்சி அளவீடுகள்
இதேபோல் 2021 ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 2022ல் அதிகப்படியான வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் 25 சதவீத வளர்ச்சி உடன் தெலுங்கானா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகா - 22 சதவீதம், உத்தர பிரதேசம் - 21 சதவீதம், ஹரியானா - 20 சதவீதம், மகாராஷ்டிரா - 18 சதவீதம், தமிழ்நாடு - 16 சதவீதம் வளர்ச்சியில் உள்ளது.
கே.டி.ராமா ராவ்
சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் ஐடி துறை அமைச்சர் கேடிஆர் என அழைக்கப்படும் கே.டி.ராமா ராவ் பல திட்டங்களையும், கொள்கை மாற்றங்களையும் ஐடி சேவை துறை முதலீட்டை ஈர்ப்பதற்காகவே மாற்றி வருகிறது.
வளர்ச்சி, வேகம்
குறிப்பாக புதிதாக வரும் நிறுவனத்திற்கு வேகமாக ஒப்புதல், நிலம், மின்சாரம் என சகல ஒப்புதல்களையும் ராக்கெட் வேகத்தில் கொடுக்கும் கட்டமைபை உருவாக்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள்
இதனால் தெலுங்கானா மாநிலம் ஐடி சேவை துறையில் மட்டும் அல்லாமல் டெக்ஸ்டைல் முதல் பார்மா துறை வரையில் பல துறையில் புதிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்து வருகிறது. தெலுங்கானாவின் வளர்ச்சி நாட்டின் முன்னணி பொருளாதார மாநிலங்களுக்கு வியப்பு அளிக்கிறது.