இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது கடந்த காலாண்டில் எதிர்பாராத அளவு வளர்ச்சியை கண்டது. இது ஊழியர்களுக்கு மிக நல்ல விஷயமாக இருந்தது. ஏனெனில் ஒரு முறைக்கு இருமுறை சம்பள உயர்வு, பதவி உயர்வு என இன்ப அதிர்ச்சி கொடுத்தன ஐடி நிறுவனங்கள்.
இப்படி மிகப்பெரிய வளர்ச்சியினை எட்டியுள்ள ஐடி நிறுவனங்களுக்கு, தற்போது கடுமையான சவால்களும் காத்துக் கொண்டுள்ளன எனலாம்.
ஏன் அப்படி என்ன சவால்கள் உள்ளது? இது ஐடி ஊழியர்களுக்கு சாதகமா? பாதகமா? ஏன்? நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான பிரச்சினைகளை கொடுக்கலாம். ஐடி நிறுவனங்கள் இன்னும் எந்த மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
தற்போது நிலைமை தலைகீழ்
கொரோனாவுக்கு முன்பாக பல ஆண்டுகளாகவே இந்திய ஐடி துறையில் இருந்து வந்த மிகப்பெரிய பிரச்சனை ஊழியர்களின் பணி நீக்கம். ஆனால் இன்று பிரச்சனையே அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. தற்போது ஐடி நிறுவனங்களில் தேவையானது அதிக அளவில் இருந்தாலும், ஊழியர்களின் வெளியேறும் விகிதமானது அதிகரித்துள்ளது. தேவை அதிகமாக உள்ளது. இதனால் ஐடி துறையில் பணியாளர்களுக்கு பற்றாக்குறையே நிலவி வருகிறது.
தேவை அதிகரிப்பு
ஐடி துறையினை பொறுத்தவரையில் கொரோனவின் வருகைக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஏனெனில் ஐடி துறையில் தேவையானது வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இதனால் ஐடி நிறுவனங்களின் ஒப்பந்த விகிதமானது முன்பைவிட எதிர்பாராத அளவு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவுக்கு முன்பு அட்ரிஷன் விகிதம்
கொரோனாவுக்கு முன்னதாக ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதமானது கணிசமாக குறைந்திருந்தது. ஏனெனில் ஐடி ஊழியர்கள் தங்களது வேலையினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று, நிறுவனத்தினை விட்டு வெளியேறாமல் இருந்து வந்தனர். ஆனால் கொரோனாவுக்கு பின்னர் டிஜிட்டல் துறையில் தேவையானது அதிகரித்துள்ள நிலையில், வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன.
முன்னணி நிறுவனங்களில் அட்ரிஷன் அதிகரிப்பு
ஆனால் இன்று அப்படியில்லை நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் அட்ரிஷன் விகிதம் மிக கவலையளிக்கும் விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்களில் இந்த விகிதமானது வெகுவாக அதிகரித்துள்ளது.
ஒப்பந்தங்கள் அதிகரிப்பு
கொரோனா காலகட்டத்தில் டிஜிட்டல் தேவையானது மிக அதிகரித்து வந்த நிலையில், ஒப்பந்தங்கள் வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளன. இதனால் ஐடி ஊழியர்களுக்கான தேவையானது அதிகரித்துள்ளது. இந்த நிலை இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரலாம் என்ற நிலைக்கு மத்தியில், அட்ரிஷன் விகிதமானது கவலையளிக்கும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.
பல வாய்ப்புகள்
தற்போது டிஜிட்டல் திறமைக்கான தேவையானது மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இதனால் டிஜிட்டல் திறமை மிக்க ஊழியர்களுக்கு பல வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன. இதனால் ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கும் நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில் தான் அட்ரிசன் விகிதம் அதிகரித்து வருகின்றது.
ஐடி ஃபிரெஷ்ஷர்களுக்கான சம்பளம்
இதன் எதிரொலியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐடி ஃபிரெஷ்ஷர்களுக்கான சம்பளம் கிட்டதட்ட இருமடங்கு அதிகரித்துள்ளது. எனினும் சில நிறுவனங்களில் ஒரு ஆண்டில் அட்ரிஷன் விகிதம் 20 - 30% வரையில் அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் முன்னணி நான்கு ஐடி நிறுவனங்களுக்கான அட்ரிஷன் விகிதம் எவ்வளவு? இது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை பற்றிதான், இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
டிசிஎஸ் நிலவரம்
நாட்டில் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் இது வரை இல்லாத அளவாக கடந்த மார்ச் 2021 முடிந்த ஆண்டில் அட்ரிஷன் விகிதம் 7.2% ஆக குறைந்திருந்தது. ஆனால் செப்டம்பர் 2021 நிலவரப்படி, 11.9% ஆக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் விகிதம் 5,28,748 பேராகும். டிசிஎஸ் நிறுவனம் நாட்டில் மிகப்பெரிய அளவில் பணியமர்த்தும் நிறுவனங்களில் ஒன்றாகும்.
எப்படி எதிர்கொள்கிறது?
இந்த அட்ரிஷன் விகிதத்தினை கட்டுக்குள் வைக்க டிசிஎஸ் அதிகளவிலான ஃபிரெஷ்ஷர்களை பணியமர்த்தி வருகின்றது. அவர்களுக்கு தேவையான பயிற்சியினை கொடுக்கவும், அவர்களுக்கு தொழில் நுட்பம் குறித்தான திறனை வழங்கவும் அதிகளவில் செலவு செய்கின்றது. இதன் மூலம் திறன் மிக்க ஐடி ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றது.
இன்ஃபோசிஸ் நிலவரம்
கடந்த சில ஆண்டுகளாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனை எதிர்கொள்ளும் விதமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் பணியமர்த்தலையும் செய்து வருகின்றது. எனினும் மற்ற ஐடி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் அதிகம். இது இந்த நிறுவனத்தின் பணி கலாச்சாரம் உள்ளிட்ட பல காரணிகள் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்ஃபோசிஸ்-ன் அட்ரிஷன் விகிதம்
செப்டம்பர் 2021ல் முடிவடைந்த காலாண்டில் அதன் அட்ரிஷன் விகிதம் 20.1% ஆக அதிகரித்துள்ளது கடந்த ஜூன் காலாண்டில் 139% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் நிறுவனத்திற்கு கவலையளிக்கும் விஷயமாக இருந்தாலும், இந்த நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. எனினும் இதனை எதிர்கொள்ளும் விதமாக இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் 45,000 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இது முன்னதாக 35,000 பேராக திட்டமிட்டிருந்தது.
விப்ரோவின் அட்ரிஷன் விகிதம்
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அட்ரிஷன் விகிதம் 20.5% ஆக அதிகரித்துள்ளது. இது ஜூன் காலாண்டில் 15.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 80% பேருக்கு சம்பள உயர்வை வழங்கியுள்ளது. இதற்கிடையில் இந்த அட்ரிசன் விகிதம் கணிசமான உயர்வைக் கண்டுள்ளது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் விப்ரோ நிறுவனம் 12,000 ஃபிரெஷ்ஷர்களை பணியில் திட்டமிட்டுள்ள நிலையில், கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 30,000 ஃபிரெஷ்ஷர்களை தேர்ந்தெடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஹெச்.சிஎல் டெக்னாலஜி
ஹெச்.சிஎ.ல் டெக்னாலஜி நிறுவனம், விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை எனலாம். செப்டம்பர் 21 நிலவரப்படி, ஹெச்.சிஎல் டெக்னாலஜியின் அட்ரிஷன் விகிதம் 15.7% ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 11.8% ஆக இருந்தது. இதற்கிடையில் ஹெச்.சிஎல் நிறுவனமும் மிகப்பெரிய அளவில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 20,000 - 22,000 ஃபிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு கவலை
தற்போது ஐடி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருப்பது நிறுவனங்களின் அட்ரிஷன் விகிதமாகும். தற்போது தேவை வலுவாக இருந்து வரும் நிலையில், வரும் காலாண்டுகளிலும் அட்ரிஷன் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சிறந்த திறனுள்ள ஊழியர்களுக்கான தேவை என்பது அதிகரிக்கலாம். இது ஐடி நிறுவனங்களில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.