இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நாட்டில் வேலைவாய்ப்புகளை இழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் மிகவும் மோசமான நிதி நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
CMIE அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் படி இந்த மே மாதம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவீடு இந்த வருடத்திலேயே உச்ச அளவீட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை இழந்த 1 கோடி பேர்
இந்தியாவில் மே மாதம் மட்டும் சுமார் 1 கோடி பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறும் CMIE அமைப்பு, நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவு 11 சதவீதம் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளதாக இந்த அமைப்பின் நிர்வாகத் தலைவர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு
மேலும் மே 2020க்குப் பின் நாட்டின் வேலைவாய்ப்பின்மை இந்த மே மாதம் தான் உச்சத்தைத் தொட உள்ளதாக மகேஷ் தெரிவித்துள்ளார். 2020ல் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் அதிகளவில் வேலையை இழந்தனர்.
மாநில அரசுகளுக்கு அதிகாரம்
ஆனால் தற்போது மாநில அரசுகள் தொழிற்சாலைகளுக்குப் பல தளர்வுகளுடன் இயங்கி வரும் வேலையில், MSME பிரிவில் இருக்கும் பல கோடி நிறுவனங்கள் வர்த்தகத்தை இழந்து நிறுவனத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள காரணத்தால் வேலைவாய்ப்பின்மை அளவீடு அதிகரித்துள்ளது.
வர்த்தகம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பாதிப்பு
இதேவேளையில் கொரோனா 2வது தொற்று அலை மக்களைப் பெரிய அளவில் பாதித்துள்ள காரணத்தால் அதைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன், ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவை நாட்டின் வர்த்தகம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
3 லட்ச பேர் மரணம்
இதுவரை இந்தியாவில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக் காரணமாக மரணம் அடைந்துள்ளனர். 2.7 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பாதிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நேரடியாக எதிரொலிக்கிறது என்றால் மிகையில்லை.