டெல்லி: வளர்ந்து வரும் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனையே பொருளாதாரம் என்றாலும், அதன் மறுபுறம் வேலையின்மையும் நீடித்து வருகிறது.
அதே சமயம் பணி நீக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையிலேயே இந்திய பொருளாதாரம் மேலும் சரிந்து வருகிறது.
ஏறத்தாழ உலகின் அனைத்து பகுதிகளிலும் வேலையின்மை பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது என்றாலும், இந்தியாவில் தற்போது நிலவி வரும் பிரச்சனையால் மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
உலகை அச்சுறுத்துக் காரணிகள்
இது குறித்து உலகை அச்சுறுத்தும் காரணிகள் எவை என்பது குறித்து இப்சோஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இது குறித்தான ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் படி இந்தியாவில் 69 சதவிகித நகர்ப்புற மக்கள் இந்தியா சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரம், சர்வதேச அளவில் சராசரியாக 61 சதவிகிதத்தினர் தங்களது நாடு வீழ்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் இந்த ஆய்வில் கூறியுள்ளனர்.
வேலையின்மையே பிரச்சனை
எனினும் இந்தியாவிலேயே அதிகம் கவலைகொள்ளத்தக்க விஷயமாக வேலையின்மையே பெரும் பிரச்சனையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக 46 சதவிகித நகர்ப்புற இளைஞர்கள் வேலையின்மை பிரச்சினை குறித்து கவலை தெரிவித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை நிரூபிக்கும் விதமாகவே அரசு தரப்பு தகவல்களின் படி, நவம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 3 சதவிகிதம் உயர்ந்திருந்தது.
இந்தியாவில் என்னென்ன கவலைகள்?
இந்தியாவைப் பொறுத்தவரை வேலையின்மையே மிகப்பெரிய பிரச்சனையாக மேற்கொள்ளப்பட்டாலும், இதற்கு அடுத்தாற்போல் நிதி மற்றும் அரசியல், ஊழல் குற்றம், வன்முறை, சமூக சமத்துவமின்மை, கால நிலை மாற்றம் என அடுத்தடுத்த பிரச்சனைகளாக இந்தியர்களை கவலையடையச் செய்யும் செயல்களாக உள்ளன என்றும் இந்த ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
உலகளவில் என்னென்ன பிரச்சனை?
உலக அளவில் பார்த்தால் வறுமையும் சமூக சமமின்மையும் தான் அதிக அச்சுறுத்தல் தரும் காரணிகளாக இருக்கின்றன. அதைத் தொடர்ந்து வேலையின்மை, குற்றங்கள், வன்முறை, சுகாதாரம் ஆகியவை இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வானது உலகின் 28 நாடுகளிடையே மாதாந்திர அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு பின்னடைவு
இந்த ஆய்வில் பங்க்கேற்ற பெரும்பாலான இளைஞர்கள், அதிலும் இந்திய நகர்ப்புறங்களில் உள்ள இளைஞர்களில் பாதிக்கு மேலானோர் வேலையின்மை குறித்து கவலை தெரிவித்திருப்பது மிக பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும் கிராமப்புறங்களில் வேலையின்மை பிரச்சினை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனினும் வரவிருக்கும் காலங்களில் ஆவது இப்பிரச்சனை குறையுமா? இல்லை இன்னும் விஸ்ரூபம் எடுத்து மீண்டும் ஆடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.