2022 ஆம் ஆண்டில் உலகையே புரட்டிப்போட்ட ஒரு விஷயம் என்றால் ரஷ்யா - உக்ரைன் போர் தான், கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்தது மட்டும் அல்லாமல் 2022 ஆரம்பம் முதல் உலக நாடுகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற மிகப்பெரிய கனவுடன் இருந்த நிலையை புரட்டிப்போட்டது இந்தப் போர்.
குறிப்பாகக் கொரோனா பாதிப்பில் இருந்து 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் மீளாத பல நாடுகளை இந்தப் போர் பெரிய அளவில் பாதித்தது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு மட்டும் 35000 கோடி ரூபாய் அளவிலான சேமிப்பை அளிக்கும் வாய்ப்பை ரஷ்யா கொடுத்துள்ளது.
விளாடிமிர் புதின்
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பிப்ரவரி மாதம் முதல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அளித்த தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது மூலம் இந்தியா சுமார் 35000 கோடி ரூபாய்ச் சேமித்துள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா-வில் தற்போது இந்தியா மற்றும் சீனா அதிகப்படியான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
கச்சா எண்ணெய்
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் வெறும் 2 சதவீதம் மட்டுமே ரஷ்யாவின் இறக்குமதி, ஆனால் 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் ரஷ்ய இறக்குமதி அளவு மொத்த எண்ணெய் இறக்குமதியில் 16 சதவீத பங்கு வகிக்கிறது.
இந்தியா - ரஷ்யா
Vortexa என்னும் கச்சா எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவன தரவுகளின்படி, ரஷ்யாவிலிருந்து ஒரு நாளுக்குச் சுமார் 909,400 பேரல் கச்சா எண்ணெய் வாங்கியதன் மூலம் 2வது மாதமாக நவம்பர் மாதமும் இந்தியாவிற்கு அதிக எண்ணெய் சப்ளை செய்யும் நாடாக ரஷ்யா விளங்குகிறது.
40 சதவீத எண்ணெய்
நவம்பர் மாதத்தில் மற்ற நாடுகளைக் காட்டிலும் கடல்வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய்யில் 40 சதவீதத்தை இந்தியா வாங்கியது என Refinitiv மற்றும் வர்த்தகர்களின் தரவுகளின் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் கணக்கிட்டு உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கத் துவங்கியது, இதன் மூலம் கடுமையான வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்புகளை எதிர்கொண்டது.
நீண்ட கால நட்பு
இந்த நிலையில் ரஷ்யா உடனான நீண்ட கால நட்பு காரணமாக இந்தியா, உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா மீது எவ்விதமான தடையும் விதிக்கவில்லை, எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ரஷ்யா இந்தப் போருக்கு பின்பு இந்தியான உடனான வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என முடிவு செய்தது.
ஐரோப்பா, பிரிட்டன்
இதன் அடிப்படையில் ஐரோப்பா, பிரிட்டன் நாடுகளில் இருந்து ரஷ்யா வாங்கும் பொருட்களை இந்தியாவில் இருந்தும். ரஷ்யா ஐரோப்பா, பிரிட்டன் நாடுகளில் ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்-ஐ இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது. இந்தப் போர் மற்றும் வர்த்தகத் தடையின் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க தயங்கியது இந்தியா.
ரஷ்யா அரசு
ஆனால் ரஷ்யா அரசு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு சொந்த காசில் இன்சூரன்ஸ் அளித்தது மட்டும் அல்லாமல் ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு சுமார் 40 சதவீதம் வரையிலான தள்ளுபடியை கொடுத்தது.
கச்சா எண்ணெய் சப்ளையர்
இந்த வாய்ப்பை தவர்க்க விட முடியாத அளவிற்கு இருந்த காரணத்தால் இந்தியா போர் துவங்கிய சில வாரத்தில் இருந்தே ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்க துவங்கி கடந்த 3 மாதங்களில் இந்தியாவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையர் ஆக ஈரான், சவுதி ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை ரஷ்யா பிடித்துள்ளது.
35000 கோடி ரூபாய்
இந்தத் தள்ளுபடி இறக்குமதி வாயிலாகத் தான் இந்தியாவுக்குச் சுமார் 35000 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கச்சா எண்ணெய் இறக்குமதி மீது சேமித்துள்ளது இந்தியா.